என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை ஆதீனம் உடல் பரிசோதனை செய்து, முகாமை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
தூங்குகின்ற புலியை இடறிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும்- மதுரை ஆதீனம்
- நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.
- ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது.
மதுரை:
மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் அனைவரும் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். விரைவில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு உள்ளேன். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானை ஏனைய உலக நாடுகள் தனிமைப்படுத்தி எந்த தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைக்கு மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான் தான், அதனை தூண்டி விடுவது சீனா.
செல்போனில் நல்ல கருத்துகளை பார்க்கவேண்டும். ஆனால் சினிமா மோகத்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். அதில் பாகிஸ்தான் இருக்குமா? என்று தெரியவில்லை. ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை சரியான பதிலடி கொடுப்பார்கள். நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்பர் ஒன் ஆக பிரதமராக மோடி உள்ளார்.
பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடறிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு தான் ஆதரவாக நிற்கிறது. பயங்கரவாதிகளை வளர்ப்பது பாகிஸ்தானில் தான், அவர்களை தூண்டி விடுவது சீனா தான்.
தீவிரவாதத்திற்கு எதிராக சிந்து நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். யார் கூறினாலும் சரி, அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது. மனிதாபிமானத்தின் படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. அவர்கள் இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரர் வீர சாவாகர் குறித்து தவறாக பேசக்கூடாது. ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது. ஈழத் தமிழர்களை அவர்களது தந்தை ஆட்சியில் தான் கொலை செய்தார்கள். வாஜ்பாய் ஆட்சியின்போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






