என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
- பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தனபால்-சாவித்திரி தம்பதியரின் மகன் சங்கீர்த்தன். தனபால் விசைத்தறி தொழில் செய்து வரும் நிலையில் சங்கீர்த்தன் தனது பள்ளி படிப்பை அரசு பள்ளியில் முடித்துள்ளார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். இதில் அவருக்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து நீட் நுழைவு தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று திருமுருகன் பூண்டியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என சரிபார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அந்த கடிதத்தில், நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மருத்துவ படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன் என தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்த போது சங்கீர்த்தன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சங்கீர்த்தன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.
- புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 26). பி.ஏ. பட்டதாரி. இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். திருமணம் ஆனவர். இவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். உமேஸ்வரன் தனியாக வசித்து வந்தார்.
இவரது பெட்டிக்கடைக்கு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் சென்று உள்ளனர்.
அப்போது அந்த மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உள்ளார்.
உமேஸ்வரனின் பேச்சில் மயங்கிய 5 மாணவிகளை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
நாளடைவில் இவரது சுயரூபம் தெரிந்ததும் மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறைக்கு 1099 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஷோபனா தலைமையிலான குழுவினர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.
பழங்குடியின மாணவிகள் 5 பேருக்கு பட்டதாரி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10 மற்றும் 11-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
- தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மாவட்ட கனிமவள முறைகேடு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு மற்றும் மேலூர் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் விசாரணை நடத்தி, அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்திருந்தார்.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அதன் பின்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எனவே கோர்ட்டில் ஆஜராகும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசு வக்கீல் மூலமாக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் தலைமை நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதி காரி சகாயம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லை என்றால் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
- விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
- நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி (தெற்கு), கல்லணை(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள்.
- வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.
மறைமலைநகர்:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டு மறைமலைநகரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:-
சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும்.
எனது தலைமையிலான ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
காரணம் இன்றி உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறார்கள். வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு வணிகர்கள். உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே. அவர்கள் நலனை பாதுகாப்பதில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
சிறிய தேனீர் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எங்கள் ஆட்சியில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. செவி சாய்க்கும். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அஜ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகியோர் டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேறியுள்ளனர்.
- மலைப்பாதை வழிகாட்டிகள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அஜ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேறியுள்ளனர். அப்போது இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜ்சல் சைன் உயிரிழந்தார். தற்போது மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது.
- ரெயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேன், மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய ரெயில்வேயா?
இந்தி ரெயில்வேயா?
இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.
இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல,
இந்தியை திணிப்பது மட்டுமே.
ரெயில்வே நிர்வாகமே,
போட்டி விதிகளை மாற்று! என கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
- அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது?
சென்னை:
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
* பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
* நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது. நமது நாட்டினரால் நடத்த முடியாதா?
* ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?
* நீட் தேர்வு எழுதுவதாலேயே தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரகத்தனமாது.
* நீட் தேர்வால் கிராம மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை.
* வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?
* தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
* வட இந்தியாவில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகின்றனர், மேற்பார்வையாளர் காவலுக்கு நிற்கின்றனர்.
* மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?
* உள்ளாடைகளை கழட்டச் சொல்வதால் ஜவுளிக்கடையில் நீட் தேர்வுக்கு ஏற்ற ஆடை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர்.
* அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.
- கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
- எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை:
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ்வார விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும் தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.
தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் 'பூச் செண்டு' என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். 'உன் வாழ்க்கை உன் கைகளிலே' என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.
ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர்.
கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.






