என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளம்"
- கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
- பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள் விழுந்தது நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் இந்த பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
- சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூலின் புறநகர்ப் பகுதியான துபாடு அருகே உள்ளபெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 மீட்டர் அகலம் 16 மீட்டர் ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் சாய்வதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
சில வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் நேற்று இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கித் தவித்தன.
இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
- பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.
தாம்பரம்:
தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.
இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.
- சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
- சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.
மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-
நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
- கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது.
- பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில் இரவு-பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் அதிகாலை 1 மணியளவில் டவுட்டன் பாலம்-பட்டாளம் சந்திப்புக்கு இடையே பழைய புவனேஸ்வரி தியேட்டர் பகுதியில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது.
20 அடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண் சரிந்துள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ பள்ளம் ஏற்பட்டு இருந்தால் உயிர் சேதம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாநகர பஸ்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. வடசென்னை பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் இந்த சாலை முக்கியமானதாக உள்ளது.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்து விட்டதால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கினர். பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து அந்த இடம் அருகில் பாதுகாப்பை மேற்கொண்டனர்.
அதிகாலை நேரம் என்பதால் ஒன்று, இரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றன.
கடந்த சில வருடத்திற்கு முன்பு தற்போது பள்ளம் விழுந்த பகுதிக்கு அருகில் பள்ளம் ஏற்பட்டது. ஏற்கனவே 2 முறை அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது 3-வது முறையாக இன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.
புரசைவாக்கத்தில் இருந்து வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், கொளத்தூர், பெரியார் நகர், விநாயகபுரம், குமரன் நகர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் பெரம்பூர்-பேரக்ஸ் சாலையில் செல்ல அனுமதி இல்லை. இதே போல மறுமார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
காலையில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் அஷ்டபுஜ சாலை உள்ளிட்ட பிற சாலைகள், தெருக்கள் வழியாக செல்கின்றன.
இதற்கிடையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது சென்னை கழிவுநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகதான் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அடியில் 1000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பிரதான கழிவுநீர் குழாய் செல்கிறது. அதில் இருந்து தான் நீர் வெளியேறி பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதா? இணைப்பு பகுதியில் இருந்து நீர் வெளியேறுகிறதா? என்பது பள்ளத்தில் இருந்த மண்ணை வெளியே எடுத்த பிறகுதான் தெரிய வரும்.
எந்த அளவிற்கு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கழவுநீர் குழாய் உடைப்பை சரி செய்த பிறகுதான் பள்ளத்தை மூட முடியும். அதனால் அங்கு குடிநீர் வாரிய ஊழியர்கள், காலையில் இருந்து பணியை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் குழாயில் இருந்து நீர் வெளியேறியதன் மூலம் மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையின்போது அடைப்புகளை சரி செய்ய எந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. அதிகளவில் இந்த குழாயில் இருந்து அழுத்தம் கொடுத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம். குழாயின் மீதுள்ள மண்ணை அகற்றினால்தான் பாதிப்பு குறித்து முழுமையாக தெரிய வரும்.
ஆனாலும் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக இந்த பணி நடைபெறும். குழாய் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை மாற்றுவதற்கு தயாராக மாற்று குழாய் உள்ளது.
இந்த பணி நிறைவடைய 3 நாட்கள் ஆகலாம். அது வரையில் அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளத்தை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெறுவதால் அந்த பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை திருப்பி விடுகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி:
பள்ளம் கடற்கரை பகுதியில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கடற்கரை பகுதியில் பெண் பிணமாக கிடந்ததால் இது குறித்து கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா தலைமையிலான போலீசாரும் அங்கு வந்தனர். பிணமாக கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
அவர் இன்று காலை கடலில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
- நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி(50). கள்ளிக்குடியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த மணி, பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.
இந்தநிலையில் கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி மெயின்ரோட்டில் அகத்தாபட்டி கண்மாய் கரையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது மணி என்பது தெரியவந்தது.
- திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
- ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. மலையடிவாரம் இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
வழக்கம் போல் கடந்த 20-ந் தேதி காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் சென்றுள்ளார்.
அப்போது, நிலத்தின் நடுப்பகுதியில் திடீர் சத்தத்துடன் 15 அடி 40 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு, விவசாய நிலம் உள்வாங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான முருகேசன் மற்றும் 100 நாள் திட்ட பணியாளர்கள் அருகில் யாரும் செல்லாதவாறு 100 மீட்டர் தொலைவுக்கு கயிறு கட்டி பாதுகாப்பு செய்யப்பட்டி ருந்தது.
பள்ளத்தின் அடியில் தண்ணீர் செல்வது போல சலசலப்பு சத்தம் கேட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமா னோர் வந்தனர். தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய்த்து றையினர் வந்து பார்த்தனர். இது சம்மந்தமாக மாவட்டம் நிர்வாகம் மூலம் இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஹிஜாஸ்பஷீர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் அசரார் அஹமத் மற்றும் ஜெயபால் ஆகியோர் கூவல்குட்டை கிராமத்துக்கு சென்று நிலத்தில் ஏற்பட்ட பள்ளத்தையும், சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்து மண் மற்றும் பாறை துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
"திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒரு வாரத்தில் மற்றொரு குழு ஆய்வுக்கு வரும் என்றார். மேலும், அருகில் நீரூற்று உள்ளதா அல்லது சமீப காலங்களில் அந்த பகுதியில் வேறு ஏதேனும் பணிகள் நடந்துள்ளதா என உள்ளூர் அதிகாரிகளிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.
- இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டிணம் சாலையில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் மாற்றுப்பாதையில் செல்லும்போது வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
- சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.
ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
- வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் கிராமம் உள்ளது.
இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள ராமர் பாதம் முதல் கோடியக்கரை வரை உள்ள சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.
இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணம் செல்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற குழகர்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






