என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தாளர்கள்"

    • நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    சென்னை:

    பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ்வார விழா கொண்டாடப்படுகிறது.

    தமிழ்வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும் தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

    கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.

    தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் 'பூச் செண்டு' என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். 'உன் வாழ்க்கை உன் கைகளிலே' என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.

    ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர்.

    கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

    புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.

    நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.

    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
    • மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ந்தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப் பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

    மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
    • சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.

    இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.

    மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
    • கண்காட்சியில், சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு,

    பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

    • எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் அந்த நூலினை வெளியிடுவதற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயர், முகவரி, படைப்பின் பொருள் விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் 2 பிரதிகள் போன்ற விவரங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர்- 621112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்."

    ×