என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகாயம்"

    • கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
    • தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மாவட்ட கனிமவள முறைகேடு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு மற்றும் மேலூர் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் விசாரணை நடத்தி, அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்திருந்தார்.

    கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அதன் பின்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

    எனவே கோர்ட்டில் ஆஜராகும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசு வக்கீல் மூலமாக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் தலைமை நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதி காரி சகாயம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லை என்றால் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

    • தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
    • தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    திருமங்கலம்:

    மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது மேலூர் அருகே உள்ள கிரானைட் மலையை உடைத்து தமிழக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதை கண்டுபிடித்தேன். இதற்காக என்னை சென்னைக்கு அழைத்தார்கள். அங்கு எனது பணியை தலைமை செயலர் உள்பட அனைவரும் பாராட்டினார்கள். தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டேன்.

    மதுரை விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே என்னை கலெக்டர் பதவியில் இருந்து மாற்றியதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து யோசித்தபோது நேர்மையாக இருந்ததால் பதவி பறிபோய் விட்டதாக நினைத்தேன். 200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த கிரானைட் மலையை 20 ஆண்டுகளில் உடைத்து எறிந்துவிட்டனர்.

    அதை தடுத்து நிறுத்தியவன் நான், என் சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேர்மையாக செயல்பட்டேன். இன்றைக்கு அரசு தேர்வில் வெற்றி பெற்று அதிகாரத்தை பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் தான் தமிழ் வழியில் பயின்று வருகிறார்கள். எனவே தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×