என் மலர்
உள்ளூர் செய்திகள்
- என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அன்புமணி கூறியிருந்தார்.
- ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ள வரை நான் தான் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அப்போது இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டார். தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ள ராமதாஸ், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ. அருள் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
- புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும்.
சென்னை:
'பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிறந்த தமிழ் நாவல் "ஒற்றை சிறகு ஓவியா" படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான பால சாஹித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் தனது அற்புதமான தமிழ் சிறுகதை தொகுப்பான "கூத்தொன்று கூடிற்று மற்றும் பிற கதைகள்" என்ற படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு தேர்வாகியுள்ள லட்சுமிஹர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
இந்த மதிப்புமிக்க விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்கி, புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (20.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அடையாறு: பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, புலி வரதாச்சாரியார் தெரு, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் குப்பம், பாலகிருஷ்ணா சாலை 2-வது வார்டு தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8-வது மெயின் ரோடு சாலை, 1 முதல் 54-வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத் சிங் சாலை 1 முதல் 6-வது தெரு, ஆர்.டி.ஓ. அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.
வேளச்சேரி: பைபாஸ் 100 அடி ரோடு லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.
தாம்பரம்: இரும்பிலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.
பல்லாவரம்: கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் அண்ட் ரோடு, ரேணுகா நகர், கேஎச் ஹவுசிங், வேம்புலி நகர், என்எஸ்கே நகர், ஜிபி மாதவன் தெரு.
சோழிங்கநல்லூர்: சங்கராபுரம், கன்னி கோவில், சீதளபாக்கம் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.
- பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
- ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.
பழனி:
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர் மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராஜா முகமதுவின் செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தற்போது ராஜா முகமது பழனி பகுதியில் தேங்காய் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ராஜா முகமது கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைனில் டிப்ளமோ சான்றிதழுக்காக அரபி மொழி கற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில புத்தகங்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.
பின்பு அவரை பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன் மேல் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரியவில்லை.
- அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் வைகை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கனஅடி என மொத்தம் 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருந்த போதும் அணைக்கு 1565 கனஅடி நீர் வருவதால் நீர்மட்டம் 62.30 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் 4057 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டுமா என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.15 அடியாக உள்ளது. 3147 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.5200 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை நீர்மட்டம் 46.10 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
வீரபாண்டி 1.4, உத்தமபாளயைம் 1.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 18.2, தேக்கடி 6.2, சண்முகாநதி 1.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தொட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,265-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 122 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-06-2025- ஒரு கிராம் ரூ.122
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
- ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக வந்தது. இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 6,500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
- நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.
இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.
- அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை.
- நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
மதுரை:
மதுரை முடக்கத்தான் பகுதியில் நேற்று இரவு நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் மற்ற கொடிகளை காட்டிலும் நமது கட்சி கொடிகளை அகற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, சமாளித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் களத்தில் அது சரிவராது.
அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது.
அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.
அ.தி.மு.க.வோடு சேருவீர்களா? சேரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இருப்பதால் அது முடியாது. இப்படி கதவுகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டால் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
நாங்கள் அதற்காக கட்சி தொடங்கவில்லை. அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே கட்சியை தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
- ரவுடி பென்சில் தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
கரூர்:
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தமிழரசன் தனது கூட்டாளிகள் பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் மலையாளம் என்பவரை மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரகாஷ் ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான ரவுடி பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ரவுடி தமிழரசன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே உஷாரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் மணி வண்ணன் மற்றும் போலீ சார் ஜீப்பில் சம்பவ இடம் விரைந்தனர். போலீசை கண்டதும் தமிழரசன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.
ஆனால் போலீசார் விடாமல் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடினார்.
உடனே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டார் இதில் அவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவனைப் பிடித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு ரவுடி தமிழரசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கீழடியிலும், சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்.
- வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் தி.மு.கழக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.
மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் - இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.
கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "கீழடியில் உள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு-சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன" என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், "ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்" என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.
மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர், 2016-ஆம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.
தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார்.
கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பித்தார். இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல்.
தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.
அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.கவிடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை 'பாரத நாகரிகம்' என்று பா.ஜ.க. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே!
தமிழ் மொழி – பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தி.மு.க. ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.
தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'ட்வீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் - கழக நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர்!
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உதவிய மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழக நிர்வாகிகள், மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ் காந்தியுடன் துணை நின்ற மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலையிலுமான கழக மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்களில் ஒருவனான என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள், கழகத்தின் சார்பில் பங்கேற்று முழக்கமிட்டு உணர்வை வெளிப்படுத்திய தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் திரு.எம்.அப்துல் ரகுமான் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு.வந்தியத்தேவன் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது! என்று கூறியுள்ளார்.
- லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






