என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.
- மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
இது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடித்து வருவதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் மோடி அரசு ஆடிப் போய் இருக்கிறது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.
வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்டுள்ள சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது.
எப்படியெல்லாம் பானக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன.
அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.
அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம்.
எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.
வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தி வந்தனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 19-ந் தேதி மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயிலை மறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.
இதையடுத்து வழக்கம் போல் இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
- வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு, மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர்மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
- 11-ம் திருவிழா நாளை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7.20 மணிக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்அதிர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
11-ம் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் 12-ம் திருவிழாவில் இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, "புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோவில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
புரட்டாசி மாத வைணவத் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 20, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளன.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற் கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.
தருமபுரி:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூருவில் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதன்காரணமாக இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 21-ந்தேதி கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 840-க்கும், நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 215-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ரூ.73ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.315-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,520-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720
21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840
20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440
19-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,880
18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-08-2025- ஒரு கிராம் ரூ.128
21-08-2025- ஒரு கிராம் ரூ.126
20-08-2025- ஒரு கிராம் ரூ.125
19-08-2025- ஒரு கிராம் ரூ.126
18-08-2025- ஒரு கிராம் ரூ.127
- வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து.
- கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் ரத்து.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.
மதுரை பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய த.வெ.க. தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்லா கூட்டம்.
என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, புழல் ஏரிக்கு நேற்று 278 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 880 கன அடியாக அதிகரித்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு 122 கன அடி நீர்வரத்து வர தொடங்கியது.






