என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
    • விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு முருகன் மாநாடு நடத்தியபோது, அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது

    தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது. இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

    திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.

    தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

    சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், காமாட்சிபுரம் ஆதினம் இரண்டாவது குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

    • ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தம்.
    • ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயிலில் மாடு சிக்கியதால் சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.

    • வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
    • கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்கிற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு திருமணத்தின்போது மணமகன் வீட்டார் 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் தந்ததாகவும், மீதியை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    • உயர் அதிகாரிகள் பதவியை, அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு என்றார் அண்ணாமலை.
    • பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

    காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என்னு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.

    மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.

    ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

    காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இபிஎஸ் பிரசார பயணம் குறித்து பிரேமலதா விமர்சனம்.
    • எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

    சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    இபிஎஸ் சுற்றுபயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும்.

    எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

    நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகின்றனர்.

    எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.

    அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.

    அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்-ன் மாண்பு பாதிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
    • வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.

    தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.

    சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.

    சங்கர் ஜிவால் விடைபெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.

    வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.

    • தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
    • வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்பிலிருந்து தமிழக ஏற்றுமதியாளர்கள் மீட்க நடவடிக்கை தேவை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள். இயந்திரங்கள். ரசாயனங்கள். மின்னணுப் பொருட்கள். கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

    இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.

    வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.

    இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

    திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.

    இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

    வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.

    'உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல், 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள், 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான்.

    எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

    1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது.
    • நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கொடைக்கானலில் குவிந்தனர். நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நட்சத்திர ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மோயர்பாய்ண்ட், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட், அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்த போதும், அதில் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.

    கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்ற கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்கள் கொண்டு வரப்பட்டது. ஜாக்ரசல் பேஷன்சி, அமெரிக்கன் ஸ்டாப்ட், டெரியர், கெய்ன் கார்ஷோ, பர்னிஷ், மவுண்டன், கார்ட்டன் ஹெட்டர், பாஷான் பிரிஸ், ஆஸ்திரேலியா செப்பேடு, அஸ்கர், பொம்மேரியன் மற்றும் தமிழ்நாட்டு நாய் வகைகளான சிப்பிபாறை, ராஜபாளையம், கன்னி உள்பட 40 வகையான நாய்கள் பங்கேற்றன.

    கண்காட்சியில் நாய்களின் குணாசதியங்கள், கட்டளைக்கு கட்டுப்படுதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தி வெற்றி பெறும் நாய்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை பகுதிகளுக்கும் சென்றனர். அங்கு எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். மேலும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர். 

    • திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
    • சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் நேற்று அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சசிகாந்த் செந்திலின் இதய துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம்.
    • குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது அங்கு கிடந்தவர் இறக்கவில்லை என்பதும் சுய நினைவின்றி கிடப்பதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை 108-ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகவல் கொடுத்தவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் சுய நினைவற்று கிடந்தவர் வார இறுதி நாள் விருந்தில் பந்தயம் கட்டி மது அருந்தியதில் மயங்கி சாய்ந்தவர் என தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த திருமணமாகாத 40-வயதான தொழிலாளி ஒருவர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம். நேற்று அது போல் மது விருந்தில் அவர் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்கள் வைத்த பந்தய பணத்திற்காக விபரீதத்தை உணராமல் பெரிய பாட்டில் மதுபுட்டியை திறந்து அப்படியே குடித்துள்ளார். அதனால் தான் சுய நினைவு இழந்து மயங்கி சரிந்துள்ளார்.

    இதனை கண்டு நண்பர்கள் பயந்து விட்டனர். மயங்கியவரை இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடி உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் அச்சத்தில் போலீசாருக்கு தொழிலாளி இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.
    • பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குவிந்தனர்.

    குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    ×