search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Girl Murder"

    • மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
    • சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூடல்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 வயதாக இருக்கும் போது உடல்நலக்குறைவால் தாய் இறக்கவே, தந்தை வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி பலியானார்.

    பெற்றோர், உடன் பிறந்தவர் என உறவுகளை இழந்த சிறுமிக்கு அவரது பெரியம்மா கைகொடுத்தார். அவர் தனது தங்கை மகளை தன்னுடைய மகளாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். பெற்றோர் இல்லாத குறை சற்றும் தெரியாத அளவுக்கு அவர் மீது அன்பும், பாசமும் காட்டினார்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சிறுமி, குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா பலமுறை கதவை தட்டியும் குளியல் அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். பதறியடித்துக்கொண்டு அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெரியம்மா தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து கிடந்த வீட்டின் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கிழிந்த நிலையில் சிறுமியின் ஆடைகள் கிடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×