என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

    தற்போது நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் ஆகியவற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 10 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்று உற்சாக நடனத்தினை இசைக்கேற்றார் போலும் ,பாடலுக்கு ஏற்றார் போலும் வெளிப்படுத்தினர்.

     

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சினிமா, ஆடல் பாடல் என கவனம் செலுத்தி வரும் நிலையில் அழிந்து வரக்கூடிய இந்த பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.மேலும் இந்த மாதிரியான பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.
    • கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை அருகே உள்ள திண்ணக்காலனி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலின் அருகே புதர் நிறைந்த இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் சிலர் மது குடிப்பதும், போதையில் பாட்டில்களை போட்டு உடைப்பதும், தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிலர் முனியப்பன் கோவிலின் அருகே மது குடித்தனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டனர். இதனை அதே பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பியும் அவரது மகன் வெற்றியும் அந்த போதை ஆசாமிகளிடம் குடித்துவிட்டு ஏன் இப்படி தகராறில் ஈடுபடுகிறீர்கள். இங்கிருந்து உடனே புறப்படுங்கள் என்று கூறினர். இதனால் சின்னதம்பிக்கும் போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே போதையில் இருந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் சிலரை முனியப்பன் கோவில் அருகே அழைத்து வந்தனர்.

    அப்போது சின்னதம்பியையும் அவரது மகன் வெற்றியையும் போதை ஆசாமிகளுடன் அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினார்.

    அப்போது வெற்றி தனது நண்பரான எலக்ட்ரீசியன் கார்த்திகையை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு கார்த்தக்கும் அவரது தந்தை தேவராஜும் விரைந்து வந்தனர்.

    மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம கும்பல் தேவராஜையும் அவரது மகன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கினார். பின்பு கார்த்திக்கின் கால்களின் இடையே மோட்டார் சைக்கிளை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் ஏற்றி வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சமம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அங்க விரைந்து வந்து காயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் இறந்த கார்த்திக் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களும் திரண்டு வந்து போதையில் தகராறில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த ஏ.டி.எஸ் பி சங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உறவினர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த கார்த்திக்குக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தன் திருமணம் ஆனது. அவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
    • வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

    வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கு நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

    கேப்டனுடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

    • குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
    • குகேஷூக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.

    கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

    ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழத்து பெற்றார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை குகேஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும், குகேஷ்க்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.
    • தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்- மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார பூஜைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததினால் பக்தர்கள் தங்கள் வந்த வாகனங்களை கோவில் அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி செல்வதால் அந்த பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. 

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    இதனால் விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கோவில் அருகில் உள்ள தெரு இளைஞர்கள் தங்கள் தெருவுக்கு வரும் பாதைகளை அவர்களே பேரிகாட் அமைத்து தடுக்கின்றனர்.

    மேலும் ஏராளமான வாகனங்கள் தெப்பகுளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.
    • தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேர ளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்க ளிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்க ளும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.
    • பொதுமக்கள் கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மூலம் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை சுமார் 3.30 மணி நேரத்தில் சென்றடையும் வகையில், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த கப்பல் 'செரியாபாணி' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக இந்த கப்பல் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. இந்த 'சிவகங்கை' கப்பலின் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல்தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கப்பலின் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ. 5 ஆயிரமும், மேல்தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ.7 ஆயிரமும் வசூல் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், பொதுமக்கள் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
    • கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுவதால் அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகன செலவு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது. ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுந்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.110-க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு ரூ.120-க்கும், ரூ.72-க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு ரூ.84-க்கும், ரூ.82-க்கு விற்கப்பட்ட உடைத்த கடலை ரூ.102-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.77-க்கு விற்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.

    ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும், ரூ.38-க்கு விற்கப்பட்ட சர்க்கரை ரூ.44-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட தனியா ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் சில பொருட்கள் மட்டும் விலை குறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.635-க்கு விற்கப்பட்ட சீரகம் ரூ.380 ஆக விலை குறைந்துள்ளது. ரூ.225-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.195 ஆகவும், ரூ.420-க்கு விற்கப்பட்ட மிளகாய் தூள் ரூ.410 ஆகவும், ரூ.360-க்கு விற்கப்பட்ட மல்லித்தூள் ரூ.340 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.210 ஆகவும் விலை குறைந்துள்ளது.

    மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலையில் மட்டும் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

    • இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.
    • சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கிறது. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து சுமார் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும்போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் கம்மங்கூழ் மற்றும் ஜூஸ் கடைகள் அதிகளவில் உருவாகி வருகிறது.

    ஈரோட்டில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே கம்மங்கூழ் கடைகள் இருந்தது. ஆனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகளவில் கம்மங்கூழ் மற்றும் ராகி கூழ் அருந்தி வருகிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் கூழ் செய்து அருந்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூழ்கள் தேவை அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகரில் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் 10-க்கு மேற்பட்ட கடைகள் வியாபாரிகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ஏராளமான மக்கள் வந்து கம்மங்கூழ் வாங்கி பருகி வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, சத்தி ரோடு, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, வீரப்பன்சத்திரம், ரெயில் நிலையம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கம்மங்கூழ் கடைகள் வழக்கத்தை விட அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஈரோடு மூலப்பட்டறை அருகே வ.உ.சி. பார்க் பகுதி, சேலம் ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் கம்மங்கூழ் கடைகள் அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் 1 கடை மட்டுமே இருந்தது. தற்போது அங்கு பல கடைகள் உருவாகி உள்ளது. அங்கு கம்மங்கூழ், ராகி கூழ், மோர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிகரித்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சிறிய சந்துகள் உள்பட எங்கு பார்த்தாலும் கம்மங்கூழ் கடைகள் உள்ளது. இதனால் கம்மங்கூழ் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சாத்துக்குடி, தர்பூசணி உள்பட நீர் சத்துள்ள பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் ஈரோட்டில் கரும்பு ஜூஸ் கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் மக்கள் அதிகளவு வந்து கரும்பு ஜூஸ்களை பருகி வருகிறார்கள்.

    • அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 29-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். விழாவின் இரண்டாம் நாளான நாளை (29-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×