என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
    • அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2021-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. இளம்வயது சிறார்கள் கூட போதைப்பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.

    ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.

    எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டபேரவைத் தேர்தலில் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

    • வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் மின்சார ரெயில் நடைமேடை 10, 11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக கூட்ட நெரிசலான நேரங்களில் (பீக் அவர்ஸ்) மின்சார ரெயில்களை சீராக இயக்க எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12661), வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறபட்டு செங்கோட்டை செல்லும். பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.

    * நெல்லையில் புறப்பட்டு எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632), வரும் மார்ச் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில், தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 6.25 மணிக்கு வந்தடையும். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675), வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு திருச்சி செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார்.
    • டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர்.

    பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து பிரதமர் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மதுரையில் நடக்கும் பொதுகூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார். பின்னர் மார்ச் 1-ந்தேதியன்று இரவு பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார்.

    பிரதமர் சென்னை வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகையும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படுகிறது.

    டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    • தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.
    • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருக்கிறது.

    இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.

    இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும். "ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம். 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம்.

    எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.

    எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    எனினும் கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதிச் செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 5-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட் டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.

    • தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
    • அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகிறார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகின்றனர்.

    தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
    • பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.

    லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.

    பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர்.

    பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர். கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம்.

    ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

    சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

    பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.

    பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம்.

    இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

    • சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    • எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!
    • என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    நல்லக்கண்ணு மறைவுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!

    பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..!

    விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..!

    வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!

    சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!

    தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..!

    ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!

    பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

    ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

    தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது.

    பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்.
    • நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    நல்லக்கண்ணு மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நேர்மையான அரசியல்வாதி..

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லகண்ணு

    லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்; பொதுமக்களின் நலனுக்காக போராடிய நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் மனைவியை மயக்கி அதே குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 36 வயதான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்தான் தொழிலதிபரின் மனைவியுடன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்த திலீப் என்ற 34 வயது வாலிபர் பழகியுள்ளார்.

    வாலிபர் திலீப்பின் தாய் சங்கீதா தான் முதலில் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இதன் பிறகு தொழிலதிபரின் மனைவியும் வாலிபர் திலீப்பின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட திலீப் தொழில் அதிபர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தொழிலதிபர் மனைவி தனது குடும்பத்தை மறந்து கள்ளக்காதலுடன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

    கடந்த ஓராண்டாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் வாலிபர் திலீப் தொழிலதிபர் மனைவியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அதிக அளவில் பறித்துள்ளார்.

    தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தொழிலதிபர் மனைவியிடம் சென்று வாலிபர் திலீப் பணம் வாங்குவதை வழக்கமாகவே வைத்திருந்து உள்ளார்.

    இப்படி தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து திலீப் 850 கிராம் தங்க நகைகள் 120 கிராம் வைர நகைகள் 2½ கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.20,000 ரொக்க பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

    இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று குடியேறி உள்ளார். இருப்பினும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு மேலும் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்.

    நான் கேட்கும்போதெல்லாம் பணத்தை கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தொழிலதிபர் மனைவியை வாலிபர் திலீப் மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த சம்பவம் பற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திலீப்பின் தாய் சங்கீதா, அவரது தம்பி அங்கித் ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

    தொழிலதிபர் மனைவியை மயக்கி நகை, பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்ற மன்மத வாலிபர் திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தொழிலதிபர் மனைவியிடம் இருந்து வாலிபர் திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள திலீப்பை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    • வெண்பாவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.

    ரத்தினபுரி:

    கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவருமாக இருப்பவர் சந்தோஷ் என்ற சோமு.

    இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த திங்கட்கிழமை வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமு தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக ஆப்ரேஷன் செய்வது என்பது பெரும் சிக்கலான விஷயம் என்று கூறினர். இருப்பினும் ஆபரேஷன் செய்து பாருங்கள் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கவே, சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.

    இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், தோள், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

    8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    ×