பிரதமரின் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார். டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர்.
பிரதமரின் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை
Published on

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து பிரதமர் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மதுரையில் நடக்கும் பொதுகூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார். பின்னர் மார்ச் 1-ந்தேதியன்று இரவு பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார்.

பிரதமர் சென்னை வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகையும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com