செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான தங்கவேலு-சகுந்தலா.

பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலி

Published On 2017-09-18 11:06 GMT   |   Update On 2017-09-18 11:06 GMT
பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 50) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சகுந்தலா (45). இவர்களுக்கு மனோஜ் என்ற 18 வயது மகன் உள்ளார்.

இன்று காலை வீட்டில் உள்ள கொடி கம்பியில் சகுந்தலா துணிகளை காய போட்டார். அப்போது அங்கிருந்த டியூப் லைட்டுக்கு செல்லும் வயர், கொடி கம்பியில் உரசியதால் திடீரென மின்சாரம் சகுந்தலா மீது பாய்ந்தது. இதில் அவர் கூச்சல் போட்டு அலறினார். அப்போது சத்தம் கேட்டு தங்கவேலு விரைந்து வந்தார். மின்சாரம் தாக்கிய சகுந்தலாவை தூக்கினார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் விரைந்து சென்று கணவன்- மனைவி உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வயரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News