தமிழ்நாடு

மத்தியில் தமிழர் நலன் காக்கும் அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்- கடம்பூர் ராஜூ

Published On 2024-04-28 07:10 GMT   |   Update On 2024-04-28 07:10 GMT
  • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.
  • தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்- மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News