தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடர ம.தி.மு.க. கேடயமாக இருக்கும் - வைகோ

Published On 2026-02-20 14:45 IST   |   Update On 2026-02-20 14:45:00 IST
  • வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

மதுரை:

மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் ராணுவ உறுதி கொண்டவர்கள். கொண்ட லட்சியத்தில் உறுதியாக நடப்பவர்கள். எனவே ஒவ்வொரு கிராமங்களிலும் 10 பேர் ம.தி.மு.க.வினர் இருந்தாலும் அவர்கள் லட்சியம் மிக்க வீரர்களாக திகழ்வார்கள்.

தி.மு.க. என்ற திராவிட இயக்கம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். தென்னாட்டில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரால் பாராட்டப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் வளர பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பெரும் உதவியாக இருந்தார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வை வளர்க்க எனது கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு தி.மு.க.வின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடரும் வகையில் ம.தி.மு.க. கேடயமாக இருக்கும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். அதனை கொண்டு வர கேடயமாக ம.தி.மு.க. இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே பொதுமக்கள் திடீரென முளைக்கும் நடிகர்கள் கலை துறையில் முகத்தை காட்டி உங்களை வசியம் செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு பண்பாடு இல்லை, லட்சியம் இல்லை வேலு நாச்சியார் போன்ற வரலாற்று தலைவர்களை தங்களது லட்சிய தலைவர்களாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த தலைவர்களின் வரலாறு தெரியாது. எனவே அவர்களை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News