நாளை ஒரே மேடையில் முதலமைச்சருடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
- கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
- விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஒரு மாத காமலமாக மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை (21-ந் தேதி) தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிற தேர்தலில் பாக முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நாளை மேடையேற உள்ளனர். செல்வப்பெருந்தகை, திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.