உள்ளூர் செய்திகள்
புழுதியால் தவிக்கும் வாகன ஓட்டிகள் - ஊத்துக்குளி சாலையில் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
பெட்டிக்கடை ஸ்டாப்பை அடுத்துள்ளது நல்லாறு பாலம். இப்பாலத்தில் ரோடு சீராக உள்ளதால், வாகன ஓட்டிகள் வேகமாக வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், ஒரே நேரத்தில் 6 இடங்களில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தார் இருக்கும் பரப்பை விட மணல் இருக்கும் பரப்பும், பணி நடக்குமிடமும் தான் அதிகமாக உள்ளது.
பணி நடப்பது குறித்து எந்த முன்னெச்சரிக்கை, அறிவிப்பு பலகையும் வைக்காததால் திடீரென இரவில் பணி துவங்குவதால் வாகனஓட்டிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக பெட்டிக்கடை ஸ்டாப்பை அடுத்துள்ளது நல்லாறு பாலம்.
இப்பாலத்தில் ரோடு சீராக உள்ளதால், வாகன ஓட்டிகள் வேகமாக வருகின்றனர். பாலத்தைவிட்டு இறங்கியதும் சாலையின் நடுவே மண் நிறைந்து காணப்படுகிறது. இரவில் ரோட்டோரத்தில் உள்ள மணல் என நினைத்து இடதுபுறம் சென்று கொண்டிருக்கும் வாகனஓட்டிகள் திடீரென வலதுபுறம் திரும்புகின்றனர்.
இதனால் ஊத்துக்குளி நோக்கி செல்லும் வாகனங்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. நல்லாறு பாலத்தில் துவங்கி எஸ்.பெரியபாளையம், கூலிபாளையம் வரை ரோடு நடுரோட்டில் மட்டுமே மணல் உள்ளது. பணி முடிந்தும் தார் சாலை அமைக்கவில்லை. நான்கு கி.மீ., தூரத்துக்கு புழுதிப்புயலாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தார்சாலை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.