ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடியாக சரிவு
- ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
- நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.