இளங்கோவன்
நிலத்தகராறில் உறவினரை வெட்டி கொன்ற வாலிபர் கைது
- சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 44). இவர், இலுப்பூரில் வசித்து வந்தார்.
இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான சேட்டு மகன் பாஸ்கர் (23) என்பவருடன் நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலுப்பூர் அடுத்த குரும்பட்டியில் வசித்து வரும் கிருஷ்ண மூர்த்தி என்பவர் வீட்டிற்கு இளங்கோவன் வந்துள்ளார்.
பின்னர் அங்குள்ள கட்டிலில் படுத்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஸ்கர், இளங்கோவனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளங்கோவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
பாஸ்கர்
இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளங்கோவனை, அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இலுப்பூர் டி.எஸ்.பி முத்துராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். பின்னர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.