செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க‌ மத்திய, மாநில அரசுகள் முயற்சி- திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2018-09-01 04:00 GMT   |   Update On 2018-09-01 04:00 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தருகிறார்கள் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். #VCK #Thirumavalavan #Sterlite
தூத்துக்குடி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து முறையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கிற கருத்துக்கும், என்னுடைய ஆய்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.15 லட்சத்துகான காசோலையை திருவனந்தபுரத்தில் முதல்மந்திரி பினராயி விஜயனை சந்தித்து வழங்கியுள்ளோம். மேலும் ரூ.15 லட்சம் நிவாரண பொருட்கள் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் வழங்க உள்ளோம்.


ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பது, எந்த அளவுக்கு கோர்ட்டும், ஆட்சியாளர்களும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு துணை போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருகிறார்கள் என்று மத்திய, மாநில அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #Sterlite
Tags:    

Similar News