பூமியான்பேட்டையில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு
புதுச்சேரி:
புதுவை பூமியான் பேட்டை ராகவேந்திரா நகர் தென்றல் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 33). இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர். ஜெயலட்சுமி தடுக்க முயன்ற போது, அவரை தாக்கி விட்டு தங்க செயினுடன் மர்ம நபர்கள் மோட்டர் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
ரெட்டியார் பாளையம் பகுதியில் சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் ரோட்டில் தனியாக நடந்து செல்லவே அச்சம் அடைந்துள்ளனர்.