தமிழ்நாடு

ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது

Published On 2024-05-23 03:50 GMT   |   Update On 2024-05-23 03:50 GMT
  • சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.
  • அனைத்து கூட்டுறவு சாா்பதிவாளா்களும் தங்களது வட்டாரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படுகின்றன.

மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும்; பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டு தாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், கிடங்குகளில் இருந்து பொருட்களை நகா்வு செய்து கடைகளுக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகள் தொடா்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது அவா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து கூட்டுறவு சாா்பதிவாளா்களும் தங்களது வட்டாரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 9 மணிக்குத் திறந்து மாலை 6 மணியளவில் மூடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். இந்தச் செயல்களில் ஈடுபடும் விற்பனையாளா்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. அத்துடன் அபராதத் தொகையும் சொற்ப அளவே வசூலிக்கப்படுகிறது. எனவே, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அனைவரும் ரேஷன் கடைகளை முறையாக ஆய்வு செய்வதுடன் தவறில் ஈடுபடும் பணியாளா்களுக்கு கூடுதலான அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News