கிறிஸ்துமஸ் பண்டிகை - அரையாண்டு விடுமுறை: வெளியூர்களுக்கு 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை (23-ந் தேதி)யுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5-ந்தேதி திறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வெளியூர் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்கள். விடுமுறை நாட்களை கணக்கிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து உள்ள தால் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.
கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரெயில்கள், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 325 பஸ்களும் 24-ந் தேதி 525 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23, 24-ந் தேதியில் மொத்தம் 91 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2025 பஸ்களுடன் கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
அரசு பஸ்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.