விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே..!- ராமதாஸ்
- நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல.
- தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.
தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்," திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய விஜய், "என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம். அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக தவெக உள்ளது" என்றார்.
விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்" என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு, தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார்.
ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல. மூத்த அரசியல்வாதியாகவும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவாராக உள்ள நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.
நான் எப்போதும் பெண் குழந்தைகளை பிறந்தது முதல் 19 வயது வரை பெண் தெய்வங்கள் என்றும் 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் சொல்லி வருகிறேன். பெண்களே இந்நாட்டின் ஆணிவேர். அவர்களை மதித்திடுங்கள். அதன் பின் "பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் இதுதான் பாஜகவின் கனவு என்று சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.