தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் கட்சிகள்: கோவையில் வாடகை வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு

Published On 2026-02-15 15:50 IST   |   Update On 2026-02-15 16:05:00 IST
  • வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.
  • தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள்.

கோவை:

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் கூட்டணி இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில், முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் களத்தில் இறங்கி விட்டன.

கோவையில் அ.தி.மு.க. சார்பில் மினி லாரி மற்றும், மினி ஆட்டோக்களை வாடகைக்கு பிடித்து ஒவ்வொரு வார்டு, பகுதி வாரியாக சென்று அ.தி.மு.க.வினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை நூற்றுக்கணக்கான தெருமுனை பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.

அதேபோன்று பா.ஜ.க சார்பில் மக்களிடம் கருத்து கேட்கும் இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்காக வாகனங்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்களிடம் துண்டு சீட்டு கொடுத்து நிரப்பி, அதனை உள்ளே போடுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்த வாகனங்களும் கோவை பகுதியை சுற்றி வருகின்றன.

அதேபோன்று தி.மு.க சார்பில், தேர்தல் அலுவலகம் திறப்பு, ஆட்டோ நிறுத்தம் திறப்பு, பொதுக்கூட்டம் என்று கோவையில் தேர்தல் களத்தில் தி.மு.க தீவிரமாக வலம் வருகிறது.

தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழில் சூடு பிடித்துள்ளது. இதுவரை லோடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த வாகனங்கள் தற்போது தேர்தல் களத்தில் வலம்வர தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வாடகைக்கு அமர்த்தி வருவதால் இனி லாரி வாகனங்கள், மினி ஆட்டோக்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இதனால் வாடகை கட்டணம் உள்ளிட்ட கட்டணமும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News