செய்திகள்

வேலூரில் டாக்டரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி: 2 வாலிபர்கள் துணிகரம்

Published On 2017-11-15 11:03 GMT   |   Update On 2017-11-15 11:03 GMT
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு டாக்டரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 60). ஓய்வுப்பெற்ற அரசு ஆஸ்பத்திரி டாக்டர். இவரது மாமனார் உடல் நலக்குறைவால் பாதித்ததால் வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாமனாரின் மருத்துவ செலவுக்காக டாக்டர் செல்வம், ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்துடன் பஸ் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தார்.

அங்கிருந்து, சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய அவர், ஆஸ்பத்திரிக்குள் செல்வதற்காக வேலூர்- ஆற்காடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரூ.2 லட்சம் கொண்டு வந்த பணப்பையை கையில் வைத்திருந்தார். இதனை கவனித்த 2 வாலிபர்கள், பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர்.

பைக்கில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர், செல்வத்தின் அருகே சென்று அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு ஓடினார். சற்று தொலைவில் மற்றொரு வாலிபர் பைக்கில் தயாராக இருந்தார்.

பணப்பையை பறித்தவுடன் 2 வாலிபர்களும் பைக்கில் வேகமாக தப்பி சென்றனர். இதுகுறித்து, டாக்டர் செல்வம், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News