செய்திகள்

மீராகுமார் நாளை மாலை சென்னை வருகை

Published On 2017-06-30 06:03 GMT   |   Update On 2017-06-30 06:03 GMT
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீராகுமார் காங்கிரஸ், தி.மு.க. ஆதரவை திரட்ட நாளை மாலை சென்னை வருகிறார். நாளை இரவு கருணாநிதியை சந்திக்கிறார்.
சென்னை:

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் போட்டியிடுகிறார். அவர் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

நாளை (சனி) மாலை 4.30 மணிக்கு மீராகுமார் சென்னை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 10 மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இரவு 7 மணிக்கு தி.மு.க. கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.பி., எம்.எல். ஏ.க்களின் ஆதரவு கேட்டு பேசுகிறார்.

இரவு 7.40 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் செல்கிறார். அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.



இரவு 8.30 மணியளவில் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். இரவில் கிண்டியில் தங்குகிறார்.

மறுநாள் (ஞாயிறு) காலை 9 மணிக்கு புறப்பட்டு கார் மூலம் புதுவை மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்புகிறார்.

மாலை 4.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News