search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி தேர்தல்"

    • ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
    • 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

    இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.

    மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

    74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

    • துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.
    • பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    மடத்துக்குளம்:

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையடுத்து குடிமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார். இந் நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் பங்காரு நாராயணசாமி முன்னிலை வகித்தார்.மண்டல துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர் யூ.மனோஜ்குமார், சந்திரசேகர், மண்டல செயலாளர் டி.சற்குணம், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சிவக்குமார், நாகமாணிக்கம், மருதமுத்து, தீபன். அணிபிரிவுத் தலைவர்கள் சி.சந்துரு, மெய்யப்பன், ஆர்.பத்மநாதன், சண்முகசுந்தரம், ரவீந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், மகளிர் அணி மண்டல தலைவர் கே.கலாமணி, துணைத்தலைவர் பொ.சரண்யா, பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.
    • இவர் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி ஆவார்.

    புதுடெல்லி :

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.

    நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேவை ஏற்பட்டால், ஜூலை 18-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி தனது ஆளுமையை நிரூபிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக களமிறக்கியது. அவரை ஆதரித்து பழங்குடியினருக்கு நியாயம் சேர்க்குமாறு எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.

    ஆனால் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகளோ, பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன. இதற்காக பல்வேறு தலைவர்களின் பெயரை பரிசீலித்து, கடைசியில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை இறுதி செய்தன.

    இந்திய ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வதால், இந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு அணியினரும் தீவிர களப்பணியாற்றினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்றத்தின் 63-ம் எண் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகள் என சுமார் 44 கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தன. அத்துடன் வாக்குப்பதிவின்போதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அணி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

    அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

    அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

    திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார்.

    மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது
    • திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

    அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

    அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார்.
    • 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார்.

    திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றிருந்தனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலை பெற்றார்.

    எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திரவுபதி முர்மு ஏற்கனவே 5,77,777 வாக்குகளை (வாக்கு மதிப்பு) பெற்றுள்ளார். இது தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை விட அதிகம் ஆகும். தற்போது 10 மாநில ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

    அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார்.

    • ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.

    பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மொத்தம் 31 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு பேனாவை பயன்படுத்தி எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 771 எம்.பி.க்களில் 8 பேர் வாக்களிக்கவில்லை. 763 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

    நாடு முழுவதும் உள்ள 4,025 எம்.எல்.ஏ.க்களில் 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடவில்லை. 3,991 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து இருந்தனர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஒட்டுப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பிரத்யேக வாக்குப்பெட்டியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி பயன்படுத்தி இருந்தது. கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன.

    பாராளுமன்ற வளாகத்தில் தனி அறையில் அவை வைக்கப்பட்டன. கடந்த 2 தினங்களாக அந்த வாக்குப் பெட்டிகள் இருந்த அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன.

    ஓட்டு எண்ணிக்கைக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறை தயார் செய்யப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    பாராளுமன்ற மேல்சபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி தலைமையில் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்கினார்கள். முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். 15 பேரின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

    திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றுள்ளனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலையில் இருக்கிறார்.

    எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    • திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன.
    • கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். இக்கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    இக்கூட்டத்தில் பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்தலாம் என மம்தா தெரிவித்தார். ஆனால் அவரது யோசனையை சரத் பவார் ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

    அதன்பின்னர் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார். "சரத் பவார் ஒப்புக்கொண்டால், அனைவரும் அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, இது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

    இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான வரைவுத் தீர்மானத்தை மம்தா பானர்ஜி சமர்ப்பித்ததாகவும், ஆனால் இதற்கு மற்ற கட்சிகள் உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிக்க கூட்டம் கூட்டப்பட்டதாக பலர் கூறியுள்ளனர்.

    • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
    • காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முதலில் இதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.

    இதனால் காங்கிரஸ் அல்லாத ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். 22 கட்சிகளுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். முதலில் அவரது முயற்சிக்கு காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஆனால் மம்தா மேற்கொண்ட திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் இன்று பிற்பகல் டெல்லியில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க முதலில் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டார். அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ், இடது சாரிகட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டனர்.

    இதற்கிடையே மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர் யோசித்து பதில் சொல்வதாக கூறி உள்ளார்.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    ஆனால் பரூக் அப்துல்லாவும் பொது வேட்பாளராக களம் இறங்க தயங்குகிறார். இதுபற்றி எல்லாம் எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரில் 2 பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2-ம் நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் சுபாஸ்தேசாய், ராஷ்டீரிய லோக்தளம் சார்பில் ஜெயம்சவுத்ரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா ஆகியோர் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த்சோரனும் கலந்து கொள்ள உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை.

    ஆனால் மம்தா ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. அதுபோல ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், பொது வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு இறுதி வடிவம் கிடைக்காத நிலை இப்போதே உருவாகி உள்ளது.

    பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆதரித்தால் கூட போதும், பா.ஜ.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.
    • புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது.

    புதுடெல்லி :

    நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என்றும், இன்று (புதன்கிழமை) தனது முடிவை கூறுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவருடன் பேசிய தலைவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அவரது பதில் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறினர். 77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தி, அப்போது வெங்கையா நாயுடுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளன.

    தலைநகர் டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று டெல்லி சென்றடைந்தார். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இருவரது சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    • மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
    • காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை 24-ந்தேதி) முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த பா.ஜனதா தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி பணியில் அமர்த்தி உள்ளார்.

    அவர்கள் இருவரும் பா.ஜனதாவின் தோழமை கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதுபோல சில எதிர்க்கட்சி தலைவர்களிடமும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். என்றாலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகன் பொது வேட்பாளராக களம் இறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் சரத் பவாரை சந்தித்து பேசினார். பிறகு மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    சரத்பவார் அனைத்து கட்சிகளுடன் நல்ல அணுகுமுறையில் இருப்பதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியா விரும்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதும் அவர் முதன் முதலில் சரத் பவாருடன் போனில் பேசினார். அதுபோல இடதுசாரி கட்சி தலைவர்களும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்பவாரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

    இதற்காகவே அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் 22 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

    குறிப்பாக சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்புகிறார். ஆனால் அவரது திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.

    பா.ஜனதாவில் இருந்து வந்த ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. எனவே நாளை மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் தி.மு.க., ஆம்ஆத்மி, போன்ற கட்சிகளும் பங்கேற்காது என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தயக்கத்தை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் பேசுகையில், 'பொது வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என்று கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் நான் இல்லை என்றும் அவர் தெளிவுபட கூறி உள்ளார். 81 வயதாகும் சரத் பவார் தனக்கு பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தச்செயலாம் என்று கூறி வருகிறார்.

    குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். தனது விருப்பத்தை அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று உறுதியாக தெரிகிறது.

    காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்பட பல கட்சிகள் சரத்பவாரையே ஆதரிக்கின்றன. எனவே அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை தெரிந்து விடும்.

    சரத் பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை முன் நிறுத்தினால் மட்டுமே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்று திரட்ட முடியும் என்று சோனியா கருதுகிறார். எனவே நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    • இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
    • வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்.

    பாட்னா:

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை நாட்டின் உயர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே அதுகுறித்து முடிவு செய்ய முடியாது.

    2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். 2017-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தபோது அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். இதுவரை எங்கள் விருப்பப்படி ஆதரவு அளித்தோம். இந்த முறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.

    வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுவரை அதுபோன்ற ஆலோசனையும் நடத்தப்படவில்லை. ஊடகங்களில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வந்த தகவல்களிலும் உண்மையில்லை. எனக்கு போட்டியிடும் விருப்பம் சிறிதும் இல்லை" என்று அவர் கூறினார்.

    ×