search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடியின் முட்டுக்கட்டை விலகியது: விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு அனுமதி
    X

    கவர்னர் கிரண்பேடியின் முட்டுக்கட்டை விலகியது: விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு அனுமதி

    புதுவை விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.22 கோடி கடன் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, கவர்னர் கிரண்பேடியின் முட்டுக்கட்டை விலகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே முழு அதிகாரம் எனக்கூறி கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளிலும் தலையிட்டு வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னருக்கு அதிகாரம் இல்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதோடு அமைச்சரவையின் ஆலோசனையின்படியே கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் கிரண்பேடி தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, தொகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பணிகளுக்கு உத்தரவிடுவது என செயல்படுகிறார்.

    அரசு சார்பில் அனுப்பும் கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல் பல்வேறு கேள்விகளை எழுப்பி திருப்பி அனுப்புவதாகவும், மக்களின் நலன்சார்ந்த கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    இதனால் இலவச அரிசி, தீபாவளிக்கு சர்க்கரை, துறைமுக தூர்வாரும் பணி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நிதி, இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்து நிற்கிறது.

    புதுவையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்தொகையான ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால், கவர்னர் இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை. மேலும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். இதனால் சட்டசபையில் அறிவித்தும், அமைச்சரவையில் முடிவெடுத்தும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் அரசு தவித்து வந்தது.

    தற்போது மத்திய உள்துறை விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குனர் சுதிர்குமார் ராய் அனுப்பியுள்ளார்.

    அவர் புதுவை கவர்னரின் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுவை மாநில கூட்டுறவு கடனை நாங்கள் நேரடியாக தள்ளுபடி செய்யவோ, அதற்கான நிதியை மத்திய அரசு தரவோ இயலாது. ஆனால், புதுவை அரசு கூட்டுறவு நிறுவனங்களின் நிதிக்கேற்ப விவசாய கடனை தள்ளுபடி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கான கோப்பை புதுவை அரசு கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அனுமதி தராமல் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், மத்திய உள்துறை மாநில அரசே உத்தரவு பிறப்பித்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.

    இதனால் முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ்பரிதா வாரிய தலைவர் பதவியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தனக்கே வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு கவர்னர் தடை பிறப்பித்துள்ளார்.

    இதனால் இதுவரை வாரிய தலைவர்களாக எம்.எல்.ஏ.க்கள் பதவி நீட்டிப்பு பெறாமல் உள்ளனர். இந்த வி‌ஷயத்தில் ஏற்கனவே கவர்னருக்கு மாறான முடிவை மத்திய அரசு எடுத்தது.

    தற்போது விவசாயிகளின் தள்ளுபடி விவகாரத்தில் மீண்டும் கவர்னருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக அம்மாநில கவர்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மாநில அரசின் அன்றாட பணிகளில் கவர்னர் தலையிட உரிமை இல்லை என்றும், மாநில அரசோடு இணைந்து கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×