search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiranbedi"

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை கவர்னர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி புதுவை அரசின் அன்றாட பணிகளில் தலையிடுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அதில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, கவர்னர் அன்றாட பணிகளில் தலையிடக்கூடாது, அரசு அலுவல் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளம் மூலமாக பகிரக் கூடாது என்று கூறியது.

    ஆனால், இந்த உத்தரவை கவர்னர் மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் புகார் கொடுத்துள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு கடந்த 30.4.2019 அன்று வழங்கிய தீர்ப்பில் கவர்னர் மற்ற அதிகாரிகள், பொது மக்களின் குறைகேட்டல் என்ற பெயரில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொது ஊடகங்களையே பயன்படுத்த வேண்டும்.

    தனியார் வலைதளங்களின் கணினி சேவை மையங்கள் வெளிநாடுகளில் உள்ளதால் அரசு ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் உள்ளது.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி தனது வலைதளத்தில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதிகாரிகளிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி வருகிறார்.

    இது, நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பிலும் கவர்னர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
    புதுவையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த கவர்னர் கிரண்பேடி பொதுமக்கள் தங்களது வாக்கு உரிமையை வீணாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். #LoksabhaElections2019 #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.

    பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Kiranbedi
    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கவர்னரை கண்டித்து 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். #PuducherryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.

    6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

    முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,  39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார்.  மேலும்  ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக  புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.   மேலும் அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இதன் மூலம் 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநில உரிமைக்காக நடைபெற்ற 2வது மிகப்பெரிய போராட்டம் இது என கூறினார்.  போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.#PuducherryCMDharna #KiranBedi  #Narayanasamy #GovernorKiranbedi 
    புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். #PuducherryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.

    6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.



    முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். #PuducherryCMDharna #KiranBedi
    புதுவையில் கவர்னரை கண்டித்து ஐந்தாவது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த முக ஸ்டாலின் மத்திய அரசை தாக்கிப் பேசினார். #Narayanasamy #MKStalin
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி வந்தார்.

    அவசரமாக செயல்படுத்த வேண்டிய 39 திட்டங்களை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னருக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் அனுப்பினார். ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்கவில்லை.

    இதையடுத்து கவர்னரை கண்டிக்கும் வகையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். அங்கேயே அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

    முன்கூட்டியே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சில நிமிடங்கள் மட்டும் அங்கு இருந்து விட்டு உடனே தர்ணா போராட்டம் நடக்கும் இடத்துக்கு திரும்பி விடுகின்றனர்.

    இன்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி செய்த நாராயணசாமி குளித்து விட்டு வந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். முன்னதாக, இன்று கிரண் பேடி புதுவை திரும்பும் நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாராயணசாமி தனது வீட்டில் இன்று காலை கருப்புக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அதேபோல் மற்றவர்களும் தர்ணாவில் அமர்ந்து உள்ளனர். நாராயணசாமி மற்றும் அமைச்சர்களை காங்கிரஸ் மேலிட தலைவர் சஞ்சய்தத் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அகில இந்திய தலைவர்கள் பலரும் நாராயணசாமியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் புதுவை வந்தார். ஐந்தாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து அவர் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்.



    அப்போது பேசிய ஸ்டாலின், மோடி தலைமையிலான மத்திய அரசு கொல்லைப்புறம் வழியாக வந்து புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமியின் அரசை கவர்னர் கிரண் பேடி மூலம் கைப்பற்ற துடிப்பதாக குற்றம்சாட்டினார். தைரியம் இருந்தால் தேர்தலை சந்தித்து வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி அமைக்க முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற கொல்லைப்புற அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

    ஆளுநர் கிரண்பேடி மக்களுக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். பாஜகவுக்கு அடிப்பணிந்து அவர் செயல்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.

    டெல்லியில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய கவர்னர் கிரண் பேடி, புதுவை மாநிலத்தில் போலீஸ் மூலம் ஆட்சி நடத்த நினைக்கிறார். புதுச்சேரியை திகார் ஜெயிலாக மாற்றி இவர்களை எல்லாம் அடைத்து வைக்கலாம் என்று பார்க்கிறார்.

    வாழ்விடமான காட்டைவிட்டு வந்த சின்னத்தம்பி யானை திருப்பூரில் கிராமங்களுக்குள் சுற்றித்திரிந்த செய்திகள் சமீபகாலமாக ஊடகங்களில் வந்தன. இப்போது அந்த யானை பிடிக்கப்பட்டு காட்டுக்குள் திரும்ப அனுப்பப்பட உள்ளது. இதேபோல், கிரண் பேடியையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனும் நாராயணசாமியின் இந்த போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். #Narayanasamy #MKStalin
    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கவர்னரை மாற்ற வேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kiranbedi #PuducherryPolitical
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி தலைவர்கள் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் புதுவையில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    3 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிர்வாகம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    புதுவை கவர்னர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சர், கவர்னருக்கு இங்கு தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.

    ஆனால் அந்த கடிதத்தை கவர்னர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாத நிலையில் முதல்-அமைச்சர் தனது சக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கடந்த 13-ந்தேதி முதல் கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கவர்னர் மாளிகையை நோக்கி குவியத் தொடங்கினார்கள்.

    மோசமான சூழ்நிலை நிலவியதை அறிந்த நான் நேரடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தேன். மேலும் எனது கருத்துக்களையும் கூறி பத்திரிகை மூலமாக கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

    நான் இந்த பிரச்சனை சம்பந்தமாக நடுநிலையாளராக இருந்து சமரசம் செய்ய தயாராக இருக்கிறேன். பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை செய்கிறேன் என்று கூறினேன்.



    தற்போது இந்த பிரச்சனை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நான் கவர்னரை சந்தித்தேன். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் உச்சகட்ட உணர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது மாறி இருக்கிறது.

    இந்த சூழ்நிலையிலும் கவர்னர் இதில் கவனம் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் புதுவை மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை.

    இப்போது இதில் அடுத்த கட்டமாக ஒரு இக்கட்டான நிலை உருவாகி இருக்கிறது. இங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று கவர்னர் திடீரென மாளிகையில் இருந்து வெளியேறி சென்று விட்டார்.

    இனி 21-ந்தேதி தான் இங்கு திரும்ப இருப்பதாக நான் அறிகிறேன். ஒரு கொந்தளிப்பான நிலை மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் தனது கடமையை செய்ய முன்வரவில்லை. பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய வி‌ஷயமாக தென்படுகிறது.

    மிக முக்கிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மாநில தலைமை நிர்வாகியான கவர்னர் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.

    இப்படி மோசமான நிலை புதுவையில் நிலவிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் மோசமான நிலையை எட்டுவதற்கு முன்பாக அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்காக நான் சில வேண்டுகோள்களை விடுக்கிறேன். புதுவை மாநிலத்திற்கு பொறுப்பாக இருக்கும் மத்திய உள்துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இதற்காக திறமை வாய்ந்த இடைக்கால கவர்னர் ஒருவரை புதுவைக்கு நியமிக்க வேண்டும்.

    அவர் புதுவை மாநிலத்தின் இன்றைய பிரச்சனையை திறமையாக கையாண்டு தீர்க்க கூடிய வகையில் செயல்படுபவராக இருக்க வேண்டும். புதுவை மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு வைத்திலிங்கம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  #Kiranbedi #PuducherryPolitical
    கவர்னர் கிரண்பேடி திரும்பி வரும் வரை போராட்டம் தொடரும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy #congress #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை ராணுவ படையினர் தங்களது வேலையை செய்வார்கள். நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்வோம். கவர்னர் எங்கள் போராட்டத்தை கண்டு பயந்துதான் வெளியேறி உள்ளார்.


    கவர்னர் சென்றாலும் எங்கள் போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும் கவலை இல்லை. கவர்னர் திரும்ப வரும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #narayanasamy #congress #governorkiranbedi

    புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று கவர்னர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் கட்டாயத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் சட்டமன்ற வளாகத்தில் ஹெல்மெட்டை தரையில் போட்டு உடைத்தனர்.

    இது சட்டவிரோதமானது என கிரண்பேடி வாட்ஸ்- அப்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதுவையில் உயர் நீதிமன்ற உத்தரவு படி தான் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கட்டாய ஹெல்மெட் தொடர்பாக போதிய விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. இனியும் ஹெல்மெட் அணியாமல் அடம் பிடிப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.

    மேலும், தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும்.

    புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.

    இதை கட்டாயப்படுத்தாமல் இருப்பது, தளர்த்தி அமல்படுத்துவது சட்டப்படி குற்றம். கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், இச்சட்டத்தை அமல்படுத்த தடையாக இருக்கின்றனர். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளால் நாம் கட்டுப்படத்தப்பட்டு உள்ளோம்.

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்-அமைச்சர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இச்சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னை பயமுறுத்தும் செயலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஈடுபட வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #PongalGift #GovernorKiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழகத்தில் பொங்கல் பொருட்களுடன் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    அதுபோல் புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.135 மதிப்பு கொண்ட பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால், வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

    இது தொடர்பாக 2 முறை கோப்புகளை அனுப்பியும் கவர்னர் அதனை திருப்பி அனுப்பினார்.

    இதனால் பொங்கல் பரிசு கிடைக்காமல் பொதுமக்கள் கொந்தளித்து உள்ளதால் உடனே பொங்கல் பரிசுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும், ஒப்புதல் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடிக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்தார்.


    இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் எச்சரிக்கைக்கு கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவே முதல்-அமைச்சர் நாராயணசாமி விரும்புகிறார். கடந்த 2016-ல் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு வந்து என்னை சந்தித்தனர்.

    அப்போது அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் மாற்றம், திட்டம், நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் எங்களின் கருத்தை ஏற்பீர்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர். அதற்கு அனைத்து விவகாரங்களும் தகுதி அடிப்படையில் நடைபெறும் என்று குறிப்பிட்டேன்.

    இந்த வி‌ஷயத்தை நான் பதிவு செய்து வைத்தேன். முதல்-அமைச்சர் கவர்னர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பினால் அதை படித்து சட்டவிதிப்படி பரிசீலிப்பேன். ஏனெனில் கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல. அதற்கென்று பொறுப்பு உள்ளது. எதிர்பார்ப்பு, தேவைக்கு ஏற்ப பார்வையை வைப்பது தவறு. சட்டவிதிகளின்படிதான் செயல்பட முடியும்.

    நான் எதற்கும் பயப்படமாட்டேன். இது முதல்- அமைச்சருக்கும் தெரியும். பயமுறுத்தும் வகையில் வார்த்தைகளை முதல்-அமைச்சர் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோளாகவே வைக்கிறேன். பேச்சினை சரியாக கடைபிடிக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போதும் இதை செய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சரின் செயல்பாடு தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். கோப்புகள், கடிதங்களில் குறிப்புகள் மோசமாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன். புதுவையின் அதிக நலவாழ்வுக்காக ஞானமும், முதிர்வும் கிடைக்க முதல்- அமைச்சருக்கு எனது பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறிப்பிட்டுள்ளார். #PongalGift GovernorKiranbedi #Narayanasamy
    அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை கவர்னர் கிரண்பேடி சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், படைப்பாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அமைப்புகள் உள்ளிட்ட 21 கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    இதில் புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்து புதுவைக்கு குந்தகம் விளைவித்து வரும் கவர்னர் கிரண்பேடியை உடனடியே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடும் பனியை மீறி புதுவையை சேர்ந்த 700 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதச்சார்பற்ற அணிகள் இணைந்து டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது புதுவையில் இதுவே முதல்முறை. இந்த ஆர்ப்பாட்டம் புதுவை மாநில பிரச்சனைகளை நாடு முழுவதும் படம் பிடித்து காட்டியுள்ளது.

    புதுவை மாநில மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என நானும், அமைச்சர் கந்தசாமியும் கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் கவர்னர் இதற்கு அனுமதி வழங்காமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு கோப்பை திருப்பி அனுப்பினார். கவர்னருக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விதிமுறை 50-ன்படி கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும். இதை கவர்னர் ஏற்காவிட்டால் உள்துறைக்கு அனுப்ப வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்து மாற்ற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.

    இந்த விதிகளை சுட்டிக்காட்டி, அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டு அனுமதி தரும்படி கவர்னருக்கு மீண்டும் கோப்பு அனுப்பினோம். இதனிடையில் ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கவர்னர் அந்த கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார்.

    தமிழகத்தில் பொங்கல் பொருட்கள் வழங்க ஐகோர்ட் தடை விதிக்கவில்லை. ரொக்கம் வழங்க மட்டுமே தடை விதித்தனர். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்பின் சர்க்கரை பெறும் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள், ரொக்கம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    புதுவையில் அனைத்து ரே‌ஷன்கார்டுகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. எனவே புதுவையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டி கவர்னருக்கு மீண்டும் கோப்பு அனுப்பியுள்ளோம். ஐகோர்ட்டு தீர்ப்பை கவர்னர் மதிப்பதாக இருந்தால், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்க உடனடியாக கோப்பில் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் புதுவை மாநில மக்களின் விரோதி கவர்னர் கிரண்பேடி என மக்கள் முடிவு செய்துவிடுவார்கள்.


    கவர்னருக்கு என தனி அதிகாரம் கிடையாது. அவர் அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது, அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்யவும், அதிகாரிகளை மிரட்டவும் அதிகாரம் இல்லை என பலமுறை நான் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை.

    புதுவை மாநில மக்களின் வளர்ச்சி, திட்டங்களை முடக்கும் வேலையில் அவர் இறங்கியுள்ளார். திட்டத்தை முடக்குவதால் ஒதுக்கப்பட்ட தொகை கூடுதலாகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    கிரண்பேடி அதிகாரிகளை பகிரங்கமாக ஊழியர்கள் மத்தியில் மிரட்டுகிறார், தவறாக பேசுகிறார். இதை வாட்ஸ்-அப், யூ-டியூப்பில் போட்டு அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார். கவர்னராக இருக்க கிரண்பேடி தகுதியில்லாதவர். நிர்வாக திறமையில்லை. திட்டங்களை முடக்குவதில்தான் அவர் குறியாக உள்ளார். அதற்கு சில அதிகாரிகள் துணை செல்கின்றனர்.

    ஏற்கனவே புதுவையில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் கவர்னரோடு 5 அதிகாரிகள் பேட்டி தருகின்றனர். இது வெட்கப்படும் செயல். பதவி ஓய்வு பெற்ற அதிகாரி கவர்னரோடு அமர்ந்து எப்படி பேட்டி அளிக்கலாம்? இது கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம். அதிகாரிகளை வசைபாடுவதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தரம் தாழ்ந்த முறையில் பதவிக்கு தகுதியில்லாதவர் என்ற முறையில் கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.

    மக்களால் தேர்வு செய்த அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அதை நிறைவேற்ற கோப்பு அனுப்பினோம். ஆனால் ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார். ரோடியர் மில்லை எவ்வாறு மேம்படுத்துவது என அமைச்சரவை முடிவு செய்யும். மக்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.

    கிரண்பேடி இன்று இருப்பார், நாளை போய்விடுவார். மக்களின் உரிமையை பெற்றுத்தருவது எங்கள் கடமை. நாங்கள் கவர்னரோடு போராடி வருகிறோம். கவர்னர் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    அதேபோல ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகள், கூட்டுறவு நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

    துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடி கவர்னரின் செயல்பாடுகளை கண்டிக்காமல், அரசு அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது மாநில மக்கள் பாதிக்கப்படும் வி‌ஷயம். கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுகாலம் இல்லை.

    புதுவை மக்கள் கொதித்தெழுந்தால் கிரண்பேடி காணாமல் போய்விடுவார். பல போராட்டங்களை புதுவை பார்த்துள்ளது. புதுவை மக்களை கவர்னர் கிரண்பேடி தவறாக எடை போட வேண்டாம். கிடைக்க வேண்டிய உரிமையை தடுத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #Kiranbedi
    அதிகாரத்தின் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை கவர்னர் கிரண்பேடி தனது அலுவலகத்தை துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்துள்ளார்.

    புதுவையில் தலைமைச் செயலகம் மற்றும் சபாநாயகரின் கீழ் செயல்படும் சட்டமன்ற செயலகம் என 2 செயலகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்திருப்பது விதிமுறையை மீறிய செயலாகும்.ஏற்கனவே தனது அதிகாரத்தை மீறி அரசு அலுவலகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும், பல்வேறு உத்தரவுகளையும் கவர்னர் பிறப்பித்து வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கை தவறு என்று பலமுறை எடுத்து கூறியும் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.

    சமீபத்தில் கவர்னர் தனது அலுவலகத்தை தேர்வு மையமாகவும் மாற்றி உள்ளார். சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகளை வரவழைத்து தேர்வு நடத்தி உள்ளார். அரசு ஊழியர்களுக்கு தேர்வு நடத்த தனி அமைப்பு ஏற்கனவே உள்ளது.

    கவர்னர் இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறார்? அதிகாரிகளுக்கு கவர்னர் சான்றிதழ் அளித்தாலும் அது செல்லாது. அரசு அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தி இருப்பது அதிகார உச்சகட்டம்.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக பொங்கல் பரிசு அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்திலும் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு புதுவை அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் கவர்னர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், அந்தியோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் பொங்கல் பரிசு வழங்கும் படி கோப்பை திருப்பி அனுப்பி உள்ளார்.

    மீண்டும் கவர்னருக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு அனுப்ப உள்ளோம்.

    மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த கோப்பை கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால், கவர்னர் அந்த கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார்

    அதனால் வருகிற 2-ந் தேதி அமைச்சரவையை கூட்டி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக விவாதித்து மீண்டும் கோப்புகளை அனுப்ப உள்ளோம்.

    புதுவை மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் வருகிற 4-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில அந்தஸ்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அகில இந்திய தலைவர்களுக்கு அந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார்.

    இதன் காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது.

    கடந்த காலங்களில் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமித்தது. ஆனால் இந்த தடவை மாநில அரசு பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு நேரடியாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது.

    இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் நியமனம் செல்லும் என்று தீர்ப்பை உறுதி செய்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் வக்கீல் கே.கே. வேணுகோபால் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அந்த மாநிலம் மத்திய அரசின் சொத்து. எனவே அங்கு எந்த நியமனத்தையும் மத்திய அரசு செய்ய முடியும் என்று கூறினார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மேலும், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பிலும், பட்ஜெட் ஓட்டெடுப்பிலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    3 எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் புதுவை அரசியலில் புதிய குழப்பங்களை உருவாக்கி உள்ளது.

    புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தினாலும், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. இதன் மூலம் புதுவையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    மேலும், புதுவை மத்திய அரசின் சொத்து என்று கூறப்பட்ட விவகாரத்தில் புதுவையின் தனித்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் கூறிவருகின்றன.

     முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். இதில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகியவை பங்கேற்கவில்லை.

    தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மக்களாட்சி அமைப்புக்கும் பாதகமானதாகும்.

    * இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது. அதில் புதுவை அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மாநில உரிமையை காப்பது.

    * புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது.

    இந்த கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் ஏகமனதாக பதிவு செய்துள்ளார்கள்.

    3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நானும், எம்.எல்.ஏ.க்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மத்திய அரசு புதுவை மாநிலத்தை வஞ்சித்து வருகிறது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே வழி என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முன்மொழிந்திருக்கிறார்கள்.


    கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு 2 ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.

    எனவே அவர் புதுவையில் இருந்து வெளியேற வேண்டும். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், புதுவைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் வகையிலும் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இவ்வாறு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.  #Kiranbedi #Narayanasamy
    ×