search icon
என் மலர்tooltip icon

    தைவான்

    • சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
    • நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.

    இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.

    இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. அதனை மறுசீரமைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி.க்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • 55 போர் விமானங்களுடன் 7 போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொண்டன
    • எல்லைக்கோடு எதுவும் இல்லையென சீனா மறுக்கிறது

    கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடுங்கோபத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா அத்துமீறி போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. நேற்றிலிருந்து இன்று வரை சீனா மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டதுடன் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டது.

    அந்த 55 போர் விமானங்களில், பாதி விமானங்களுக்கு மேற்பட்டவை, சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாக தைவான் அறிவித்திருக்கிறது.

    இதனையடுத்து, போர் பதட்டத்தை தூண்டி வருவதாக சீனா மீது தைவான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

    போர் விமானங்களின் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை, "தைவான், சீனாவிற்கு சொந்தமானது" என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவான் குறிப்பிடும் மத்திய எல்லைக்கோட்டு பகுதி என எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    சமீபத்தில் தைவான் ஜலசந்தி பகுதியில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 2 கப்பல்கள் பயணம் மேற்கொண்டதையடுத்து தனது துருப்புகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
    • நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

    கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு பகுதியான தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

    ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 171 கீழ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.

    • தைவானின் டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது.
    • முன்னெச்சரிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    தைபே சிட்டி:

    தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    கனமழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளால் 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 7,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் கூறுகையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    • இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
    • இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

    அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.

    உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

    மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.

    தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.

    வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    • தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது.
    • டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது.

    இந்நிலையில் தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் இதில் டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஜாயின்ட் ஸ்வார்ட் எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது
    • தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார்

    தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது.

    கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியது. ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் ராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.

    தைவான் நாட்டை எதிர்க்க சீனா ராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த ஒரு சீன ராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது. அவர் தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார் என கூறுகிறார். தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் "ஃப்ராக் மேன்" படை வீரர் ஒருவர் கூறுகிறார்.

    ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், ராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், ராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது.

    தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் வான்வழி ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது
    • அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது

    கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது.

    தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது.

    கடந்த ஆண்டு, சீன இராணுவம் தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய ராணுவ பயிற்சிகளை நடத்தியது. இந்த பயிற்சிகளில் தைவான் தீவின் முற்றுகையும் நடைபெற்றது.

    இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதட்டம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க போகிறது.

    இந்த தொகுப்பில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் அடங்கும்.

    "இதன் மூலம் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை தைவான் தடுக்க முடியும்", என அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    ரஷியாவிற்கெதிராக போரிடும் உக்ரைனுக்கு வழங்கியது போலவே, அவசரகால உதவியாக ராணுவ தளவாடங்களை உடனடியாக ராணுவ அமைச்சகம் மூலம் வழங்கும் அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி (drawdown authority) எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது. மேலும் இந்த தளவாடங்கள், அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "தைவான் ஜலசந்தியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, அமெரிக்காவுடன் பாதுகாப்பு விஷயங்களில் தைவான் நெருக்கமாக ஒத்துழைக்கும்" என தைவான் அறிவித்துள்ளது

    • ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
    • "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

    கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும்.

    2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். 2020ல் 7 மணி நேரம் நீந்தியே தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதே போன்று 4 தினங்களுக்கு முன், சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு 40 வயது சீனர் ஒருவர், கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை கையோடு எடுத்து சென்றிருக்கிறார்.

    மட்சு தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதியில் நுழைந்தார். வெற்றிகரமாக நீந்தி அங்கு நுழைந்தவர் அங்கேயே அரசுக்கு தெரியாமல் வாழ்ந்திருக்கலாம்.

    ஆனால் அவருக்கு சோதனை குளவி வடிவத்தில் வந்தது. ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

    இதனால் மட்சு தீவுகளில் சுற்றுலா பயணிகளிடம் உதவி கோரினார். சுற்றுலா பயணிகள் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு இவரை குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள ஹுவாங் கி தீபகற்பத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

    அதிகாரிகள் விரைந்து வந்து அவரிடம் தகவல்களை கேட்டறிந்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பது உறுதியானது.

    இதனையடுத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட அவரை பெய்கன் சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    ஹுவாங்கி தீபகற்பத்திற்கும் பெய்கன் தீவிற்கும் இடையிலான தூரம் சுமார் 12 கி.மீ. சீனாவின் கடற்கரை பகுதியிலிருந்து தைவான் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    தைவான் பகுதிக்கும், மெயின்லேண்ட் பகுதிக்கும் இடையேயான சட்டத்தின்படி விசாரணைக்காக லியன்சியாங் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    சமீபத்திய சில ஆண்டுகளாக தைவானை சுற்றி தனது ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த இரண்டு நாட்களாக தைவான் எல்லையில் அத்துமீறிய சீன விமானங்கள்
    • தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சீனா இவ்வாறு நடந்து கொள்கிறது

    சீனாவின் போர் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சுயாட்சி செய்து வரும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் உள்ளிட்ட போர் விமானக்குழுவை அனுப்பி அச்சுறுத்தியுள்ளது.

    சீன ராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அனுப்பியுள்ளது.

    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை, சீன ராணுவம் மேலும் 30 விமானங்களை பறக்கவிட்டிருக்கிறது. அவற்றில் ஜே-10 மற்றும் ஜே-16 போர் விமானங்களும் அடங்கும். இவற்றில் 32 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் (தீவுக்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் ஒரு இடைப்பகுதியாக கருதப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லை) நடுப்பகுதியைக் கடந்து பறந்தது. பின்னர், மேலும் 23 விமானங்கள் நடுக்கோட்டைக் கடந்தன.

    தைவான் நாட்டு ராணுவம், படையெடுப்புகளுக்கு எதிராக தன்னை காப்பதற்கான தயார்நிலை பயிற்சிகளை மேற்கொள்ளும் வருடாந்திர ஹான் குவாங் (Han Guang) பயிற்சியில் ஈடுபடவிருக்கிறது.

    ஒவ்வொரு வருடமும் தைவானில் பொதுமக்கள் வான்வழி போர் தாக்குதல்களின் போது பாதுகாப்பாக வெளியேறவும், இயற்கை பேரழிவுகளின் போது தங்களை காத்து கொள்ளவும், "வான்'ஆன்" (Wan'an) பயிற்சிகள் எனும் வழிமுறைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவார்கள். வரும் வாரங்களில் தைவானில் இது நடக்க இருக்கிறது. இந்த பின்னணியில், சீனாவின் அத்துமீறல் நடந்திருக்கிறது.

    தைவானுக்கு முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபத்திய ஆண்டுகளில், தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தைவானை நோக்கி அனுப்பும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம், கடற்படை கப்பல்களையும், டிரோன்களையும் தைவானுக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு சீனா அனுப்பி வைத்தது.

    நேற்றைய மற்றும் இன்றைய ராணுவ வெளிக்காட்டுதல்களில் சீனா, தனது H-6 ரக குண்டுவீச்சு விமானங்களை தைவானின் தெற்கே தீவைக் கடந்து, பின் சீனாவின் தெற்கு கடற்கரையை நோக்கி திருப்பியது.

    முன்னாள் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகள், சீனாவால் மேற்கொள்ளப்பட்டன.

    இதில் தைவான் தீவின் மீது சீனா ஏவுகணைகளை செலுத்தியது. சீனாவின் ராணுவ பயிற்சிகளால், தைவான் ஜலசந்தியின் வர்த்தக பாதைகள் சீர்குலைந்து, விமானங்கள் தங்கள் வான்பாதையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது.

    ஏப்ரல் மாதம், தைவான் ஜனாதிபதி, ட்ஸாய் இங்-வென் உடன் தற்போதைய அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியின் சந்திப்பின் எதிரொலியாக தைவானை சுற்றியுள்ள ஆகாய மற்றும் கடல் பகுதிகளில் பெரிய அளவிலான போர் தயார்நிலை பயிற்சிகளையும் சீன ராணுவம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ×