search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"

    • கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.
    • மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அங்கிட் திவாரி என்பவர், கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கிட் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

    இதையடுத்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டியுள்ளதால் முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கிட் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2-வது தவணையாக நேற்று காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். விசாரணையில் இவர், இதுபோல பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    அதுதொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இவர் மட்டுமன்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமன்றி மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரத்தில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் நேற்று இரவு சாஸ்திரி பவன் வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டது. மத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் சாஸ்திரி பவன் வளாகம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    • வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.
    • அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் பொதுப்பணி துறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகன் மகேஷ். தந்தை இறந்ததையடுத்து இவர் பொதுப்பணி துறையில் உதவியாளராக சேர்ந்தார். தற்பொழுது மகேஷ் அயலகப் பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2013 முதல் 2022 ஆண்டு வரை காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2½ கோடி சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவில் உள்ள மகேஷ் வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது 10 ஆண்டுகளில் 8 வீடுகள் கட்டியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. அந்த ஆவணங்களை வைத்து மகேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர். மகேஷின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். அவரது சம்பளத்தை விட அதிகமான அளவிற்கு வருமானம் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காலை 7.15 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. மகேஷ் எங்கெல்லாம் வீடு கட்டியுள்ளார் என்பது குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வருகிறார்கள். அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சார்பதிவாளர் ஒருவர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் பணத்தை பெற்றுகொண்டு பில் தொகை ஒப்புதல் கொடுப்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியின் வாகனத்தை நிறுத்தி உள்ளே அழைத்துச் சென்று அவரது அறை மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சோதனை நடத்தினர்.

    சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.32,500 கைப்பற்றப்பட்டது. இதனிடையே அலுவலர்கள் வைத்திருந்த ஆயிரம், 2 ரூபாய்க்கு கணக்கு இருந்ததால் அவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இரவு 12 மணி வரை சோதனைகள் தொடர்ந்தது. இதில் மொத்தமாக ரூ.32,500 மட்டுமே கிடைத்ததை தொடர்ந்து அனைவரும் சோதனை முடித்துக்கொண்டு திரும்பி சென்றனர். இந்த தொகை குறித்து அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 6 லட்சத்து 3500 ரூபாய் பணம் சிக்கிய நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் உஷாராக இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாளே ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் பெரிதாக பணம் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

    • பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது52). மின்வாரிய அதிகாரி.

    இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் பொன்னகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை இருப்பு ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர்.

    காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சோதனை நடத்தி இவை எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    • ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன். இவர் சென்னைக்கு அரசு தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பணியிட மாறுதல் பெற்று சென்னை செல்லும் ராமனுக்கு நேற்று விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடந்தது.

    இதில் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்து இரவு 9 மணியளவில் ராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் இருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் திடீரென அலுவலகத்திற்கு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராமன், போலீசாரிடம் விவரம் கேட்டார். அப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரை ராமன் மறுத்தார். போலீசார் தொடர்ந்து அலுவலகத்தை சோதனையிட்டனர்.

    அப்போது முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளரும், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சிறு செல்வராஜை சோதனையிட்டபோது அவரிடம் கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இரவு முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் ராமன், நேர்முக உதவியாளர் சிறு செல்வராஜ், இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரை போலீசார் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள மார்டன் நகரில் உள்ள ராமன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பீரோவில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதற்கான உரிய கணக்கும் முதன்மை கல்வி அதிகாரியிடம் இல்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர முதன்மை கல்வி அதிகாரி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில் சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர தலா ரூ.3 லட்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

    இதற்கு உடந்தையாக சிறு செல்வராஜ், சாணக்கியன் ஆகியோர் இருந்துள்ளனர். பணம் சிக்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் உள்பட அவரது உதவியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.
    • சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது.

    இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. தொடர்ந்து 9 மணி நேரம் விடிய விடிய நடந்த இந்த அதிரடி சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    விருதுநகர்:

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன் (வயது59). விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று பணி முடிந்து அங்கு கேமரா ஆபரேட்டராக வேலை பார்க்கும் தனது உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.

    சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரனின் காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம் என கூறி உள்ளார். ஆனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனையிட முடிவு செய்தனர். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோரின் தலைமையில் விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுந்தேரசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பணம் வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 லட்சம் பணம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்தபோது பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்ததும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் ராமநாதபுரம் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ் நிலையத்தில் லஞ்ச பணம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார். அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் விருதுநகர் இணைப்பதிவாளர் கார், வீட்டில் இருந்து ரூ.12¼ லட்சம் சிக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ளும்போது கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    லஞ்சம் பெறும் அதிகாரிகளும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் லஞ்சம் பெறுவதும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப்பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, ஜான் பெஞ்சமின் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் பொறுப்பு ஆண்ட்ரோ மெஸ் மாலின் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. சார்பதிவாளர் அலுவலரின் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11.50 மணி வரை நடந்தது.

    சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு ஆன்றோ மெஸ் மாலின் கேமரா ஆபரேட்டர் ரெஜினா, இளநிலை உதவியாளர் ரேஷ்மா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் பெண் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடியில் தினமும் இரவு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வழியாக கேரளாவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் அந்த வாகனங்களில் டிரைவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பால் சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ குழுவினர் புளியரை சோதனை சாவடிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இரவு பணியை முடித்துவிட்டு காரில் புறப்பட்ட பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி (வயது 58) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக ஞானகுமாரி இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்து உள்ளார். அவரிடம் இருந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து பிரேமா ஞானகுமாரியிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக பெருமாள்புரத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • சோதனை முடிவிலேயே முறைகேடாக பணம் பெறப்பட்டதா என்பது தெரியவரும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தினமும் செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனை சாவடி வழியாக சென்று வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் இந்த சோதனை சாவடியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை தொடங்கிய இந்த சோதனை காலை 11 மணியை தாண்டி நடைபெற்று வருகிறது.

    சோதனை முடிவிலேயே முறைகேடாக பணம் பெறப்பட்டதா என்பது தெரியவரும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது.

    இங்கு 200 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்று வரை 34 விசாரணை கைதிகள், 4 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 38 பேர் உள்ளனர் .

    நேற்று சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் மாவட்ட சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு பட்டியல் குறித்து கேட்டறிந்தனர். சிறையில் அடைத்து வைத்துள்ள கைதிகளின் பாதுகாப்பு, குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து சிறை போலீசார் கூறுகையில், சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர். சமீபத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமரா செயல்பாடுகள், பாதுகாப்பு, எந்த வகை உணவு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு நடந்தது என கூறினர்.

    • ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர்.
    • மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது‌.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கான மத்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமான 'ஜல்ஜீவன்' இணைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் சில தினங்களுக்கு முன்பு விடப்பட்டது.

    இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சிவகங்கையில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு பணிகள் விட்டது தொடர்பான டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமூர்த்தி வாகனத்திலிருந்தும் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்படி மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை இன்று அதிகாலை சுமார் 3 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து அந்த பணம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×