search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரம்: சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு
    X

    மதுரையில் அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரம்: சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு

    • கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.
    • மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அங்கிட் திவாரி என்பவர், கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கிட் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

    இதையடுத்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டியுள்ளதால் முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கிட் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2-வது தவணையாக நேற்று காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். விசாரணையில் இவர், இதுபோல பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    அதுதொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இவர் மட்டுமன்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமன்றி மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரத்தில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் நேற்று இரவு சாஸ்திரி பவன் வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டது. மத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் சாஸ்திரி பவன் வளாகம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×