search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைதானம்"

    • ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
    • விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

    தற்போது தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,
    திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,
    துணைத்தலைவர் சோபா பாரதிமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காவலர் பயிற்சி பெறவும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்திடவும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் ஊரை ஒட்டி இருப்பதால் பயிற்சி செய்ய சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால் விளையாட்டுத்திடல் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்து தர வேண்டும் என்று முதலமைச்சர் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓமலூர் ஒன்றிய அலுவலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கி சுமார் ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் இது சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உலக நாடுகளுக்கு இணையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    • ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் மலையடிவாரத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பழனி வேல் தியாகராஜன், பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு மைதானம் மிகப் பிரமாண்ட அளவில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைய உள்ளது.

    ஜல்லிக்கட்டு என்பது சில நாட்கள் மட்டும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த பிரமாண்ட மைதானம் அமைய உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் தனி மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அதேபோன்று இந்த மைதானமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு அனைத்து போட்டிகளும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இங்கேயே தனி மருத்து வமனை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் வர உள்ளன. இங்கிருந்து 4 வழிச்சாலையில் சென்று சேரும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
    • இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகரின் மையப்பகுதியில் 6.30 ஏக்கர் பரப்பில் நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குரிய இம்மைதானம், சுற்றுப்பகுதி விளையாட்டு வீரர்களின் முக்கிய பயிற்சி மைதானமாக உள்ளது.

    ஆனால் போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த2014-15ல், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் மைதானம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது. பிற விளையாட்டுகளுக்கான வசதிகள் எதுவும் இல்லை. தற்போது இப்பகுதியில் ஆக்கி, தடகளம், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற உடுமலை பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டினாலும், மைதானத்தில் போதிய வசதிகளில்லை.

    எனவே மின்னொளியுடன் கூடிய வாலிபால் மைதானம், தடகளத்துக்கான ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகள் தேவை என இப்பகுதி விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடுமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்றுவிளையாட்டில் சாதிக்க காத்திருக்கின்றனர்.எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேதாஜி மைதானத்தில் ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    • அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அலங்காநல்லூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை மற்றும் சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமைக்கு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திடல் அமைய உள்ள இடத்தை முதல்-அமைச்சரின் முதன்மை தனி செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு விரைவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.

    ×