search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் பலி"

    • ஒரு ஆண்டுக்கு பிறகு 14 வயது சிறுவன் கைது
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.

    இந்த நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்க வில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கினார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார்.
    • மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அரசகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் மகாலிங்கம். இவரது மகன் கோபிநாத் (வயது 21).

    கோயம்புத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண் படிப்பு படித்து வருகிறார். விடுமுறையில் வந்த கோபிநாத் அவரது நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாமல் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக சென்றார்.

    நண்பர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது கோபிநாத் மேலிருந்து குதித்தார். அவர் மேலே வரவில்லை மாயமானார்.

    அதனைத் தொடர்ந்து நண்பர்கள் சிறிது நேரம் தேடிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார்.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நேற்று பிற்பகல் 2 மணியளவில் இருந்து கடந்த நான்கு மணி நேரமாக மாணவனை தேடினர்.

    மாணவன் கிடைக்காததால் மேலும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினரும் வழவழைக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை இதனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டனர் அப்போது காலை 7.15 மணியளவில் மாணவனை பிணமாக மீட்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த கல்லுக்கட்டியூரை சேர்ந்த கந்தசாமி (வயது 38) என்பவர், நாமக்கல்மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    நான், குமாரபாளையம் தாலுக்கா, கல்லுக்கட்டியூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    அதில், கவின் படவீடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளி யில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 3-ந் தேதி, எனது மகன் கவின் தன்னுடன் படிக்கும் சக மாண வர்களு டன், பச்சாம்பாளை யம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான்.

    எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர். வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்கு சென்று கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். என் மகன் படித்து, எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவான் என நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு, அவனது இறப்பு மிகப்பெரிய இழப்பு.

    அதனால், எங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழங்கும் முதல்வரின் நிவா ரண நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.
    • காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரிய த்தில் ஒயர்மேனாக உள்ளார்.இவரது மகன் பிரகாஷ் (வயது20). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.நேற்று நண்பகலில் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர்.
    • திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான்.

    சென்னை:

    சென்னை கொசப்பேட்டை பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்த வர் ராகேஷ்குப்தா. இவரது மகன் தேஜா (வயது7).

    வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளியில் தேஜா 2-ம் வகுப்பு படித்து வந்தான். பெரியமேட்டில் உள்ள மைலேடி பூங்கா நீச்சல் குளத்துக்கு தினமும் சென்று தேஜா நீச்சல் கற்று வந்தான்.

    நேற்று மாலை 6 மணி அளவில் தனது தாத்தாவுடன் சிறுவன் நீச்சல் குளத்துக்கு சென்றான். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டான். பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து தேஜாவும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டான்.

    அப்போது திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர் செந்தில் நீரில் மூழ்கிய தேஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தார். உடனடியாக மோட்டார்சைக்கிளில் வைத்து அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவன் தேஜாவை மயங்கிய நிலையில் கொண்டு சேர்த்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் தேஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் உயிரிழப்புக்கு நீச்சல் பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் சிறுவனின் உயிரிழப்புக்கு கவனக்குறைவு காரணமாக இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நீச்சல் பயிற்சிக்கு சென்ற இடத்தில் சிறுவன் தேஜா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் நண்பர்கள் இருந்துவிட்டனர்.
    • இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோனிஷ் (வயது10). மெரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்றுமாலை மாணவன் மோனிஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் சைக்கிளில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மோனிஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்து நண்பர்கள் கவனிக்கவில்லை. இதனால் மோனிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே குளித்து விட்டு கரைக்கு திரும்பியதும் நண்பர்கள் உடன் வந்த மோனிசை தேடினர். அவர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோனிசின் சைக்கிள் மற்றும் ஆடைகளை குளத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டனர்.

    இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் மோனிஷ் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு 11 மணியளவில் மோனிஷின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்
    • போலீசார் விசாரணை

    ராணிபேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகன் சஞ்சய் (வயது 16). இவரும் இவரது தங்கை நிரஞ்சனா (14) ஆகிய இருவரும் அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சய் தனது தங்கை நிரஞ்சனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சஞ்சய் லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது தங்கை நிரஞ்சனா தலையில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

    இது குறித்து தகவல் அறந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறிய காயங்களுடன் நிரஞ்சனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புளியூர் ஏரிக்கரை பகுதியில் இன்றுகாலை 6 வயது மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ண–னுார்நாடு சின்ன சோளக்கண்ணிப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் அகிலன் (வயது 17).

    கொல்லிமலை அருகே உள்ள வாழவந்திநாடு, பெருமாபட்டியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருடைய மகன் வசந்த் (17).

    இவர்கள் 2 பேரும் செம்மேடு ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வாழவந்திநாடு தண்ணிமாத்தி பகுதியை சேர்ந்த பாசகுமார், (48) என்பவர் செம்மேட்டில் இருந்து சோளக்காட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பள்ளி மாணவன் அகிலன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவன் வசந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவன் அகிலன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    கார் மோதி பிளஸ் -2 மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
    • 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 19-வது வார்டு ஜோதி நகர் பாலசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது40). இவரது மனைவி தேவி (35). தம்பதியின் மகன் ஹரிஹரன் (14). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சிறுவனை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சிறுவனுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் சிறுவனை சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தபோதும், உடல்நிலை மோசமானது. உடனடியாக 24-ந் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அப்பகுதியில் தூய்மை மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் அவரது வீட்டில் வளர்க்கும் காளை மாட்டுக்கு தண்ணீர் காட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவன் கீழே சரிந்து விழுந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

    இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுவன் வீட்டில் வளர்த்து வரும் மாட்டினை எருது விடும் திருவிழாவுக்காக தயார்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மாடு அவனை குத்தியதாகவும் கூறுகின்றனர்.

    இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-

    ஜெகதீஷ்க்கு சொந்தமான ஒரு மாட்டினை அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ப்பதற்காக கொண்டு செல்லும் வழியில் மாடு அவரை முட்டியது. அதில் காயமடைந்த சிறுவனை உடனே நாராயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வானது மாடு விடும் திருவிழாவால் ஏற்பட்டவில்லை. மாடு மேய்க்க கொண்டு செல்லும் போது சிறுவன் இறந்துள்ளான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×