search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி கூடுதுறை"

    • தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்துள்ளது
    • ஆற்றில் புனிதநீராட இருந்த தடையும் நீக்கப்பட்டது.

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இருகரைகளையும் தொட்டபடி ஓடியது.

    இதனால் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது.

    பரிகாரம் செய்ய தடை நீக்கம்

    தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்துள்ளது. இதனால் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ஆற்றில் புனிதநீராட இருந்த தடையும் நீக்கப்பட்டது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு நேற்று பவானி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பரிகாரம் செய்தனர்.

    • இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
    • பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர்.

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை மூழ்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் கரையோரம் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி முதல் பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது 22 ஆயிரம் கனஅடி மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி கூடுதுறையில் இன்று முதல் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று மாலை முதல் படித்துறை பகுதியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால் இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர். 15 நாட்களுக்கு பின்பு பவானி கூடுதுறையில் புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.

    இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.

    • பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது.
    • திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.

    பவானி :

    பவானி கூடுதுறையில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இதற்காக பரிகாரம் செய்ய தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும் வேத விற்பன்னர்கள் பலரும் அங்கு உள்ளார்கள்.

    இதேபோல் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராட கூடுதுறையில் குவிவார்கள். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்கள் முளைப்பாரி விட்டு விரைவில் குழந்தை வரம் வேண்டும் என்று புனித நீராடி புது மஞ்சள் கயிறும் கட்டிக்கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று புனிதநீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை அன்றும், ஆடி முதல்நாள் அன்றும் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமானோர் அப்போது புனித நீராடினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எண்ணினார்கள்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஆடிப்பெருக்கான இன்று (புதன்கிழமை) பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பவானி காவிரி ஆற்றங்கரையோரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு,' வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தேவையான தயார் நிலையில் உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமான இந்த கோவில் சிறந்த பரிகார தலம் ஆகும். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளதால், உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
    • கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமானது. இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. தென்னகத்தின் காசி, திரிவேணி சங்கமம், திருநானா என பல்வேறு சிறப்புக்களுடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும்.

    இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகம் மற்றும் கூடுதுறை பகுதியில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 5 இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது.

    கோவிலை சுற்றிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர். ஆண்கள் , பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 15 -க்கும் மேற்பட்ட பரிசல்களில் நீச்சல் தெரிந்த உள்ளூர் மீனவர்கள், மற்றும் லைவ் ஜாக்கெட் அணிந்த பவானி தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக தயார் நிலையில் இருந்தனர்.

    பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் அணிந்து வர வேண்டாம் என போலீஸ் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜைகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    கொடுமுடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கருங்கல்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
    • தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் வந்து காவிரியில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்கள் தொட்டி யில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்கு வசதியாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக தனி தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிகாரம் மற்றும் திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு இருந்த தடையையும் நீக்கியுள்ளனர்.

    இதற்காக கோவிலில் ஆங்காங்கே இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, என்.சி.சி. என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.
    • நீர்வரத்தை பொறுத்து புனித நீராட அனுமதி அளிக்கப்படும்.

    பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு கூடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி மாத பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். மேலும் நாக தோஷம், திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் பரிகார வழிபாடும் செய்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜை செய்வதற்காக வருவார்கள். ஆனால் தற்போது பவானியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கலாமா? திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவத்துறை மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:- வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்தை முறையாக சீரமைக்க வேண்டும். தீயணைப்பு துறை சார்பில் நீச்சல் வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு இருக்க வேண்டும். மருத்துவத்துறையினர் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய சுகாதார குழுவினர் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் இருக்க வேண்டும்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் கூடுதுறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ளம் குறித்த தகவல்களை பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

    மேலும் ஆடி அமாவாசையான வருகிற 28-ந் தேதி பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கூடுதுறை பகுதியில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.

    கூடுதுறை தவிர ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அங்குள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பு கருதி பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனத நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
    • ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் கூடுதுறைக்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பேர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் வெள்ளம் அதிகளவு செல்கிறது. பக்தர்கள் குளிக்கும் படிக்கட்டுகள் வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறையில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் தடுப்புகள் அமைத்து உள்ளனர். மேலும் ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் கூடுதுறைக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று காலை கூடுதுறைக்கு பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்களும் செய்வதறியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். குளிக்க தடை செய்யப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையொட்டி பக்தர்கள் பலர் கூடுதுறை கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    • பக்தர்கள் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் விலக வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பவானி கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆறுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கூடுவதாக ஐதீகம். இதனால் இங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பவானி கூடுதுறையில் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்காக அதிக பக்தர்கள் குவிவார்கள்.

    இந்த நிலையில் ஆனி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். சில பக்தர்கள் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் விலக வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.

    ×