search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"

    • வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது.
    • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் வாட்ஸ்-அப் குரூப்பில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர் திசையன்விளை கூட்டத்திற்கு கே.எஸ். அழகிரி வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் என்று பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் உள்வாய் சாத்தான்குளத்தை சேர்ந்த நிர்வாகி அம்புரோஸ் என்பவர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.

    மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.

    அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

    நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.

    நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.

    பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர்.
    • டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

    ஆட்சிக்கு போட்டி போடுகிறார்களோ இல்லையோ கட்சியில் பதவிக்கு போட்டி போடுவதில் முன்னணியில் நிற்பது தமிழக காங்கிரஸ் கட்சி.

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைவர்கள் திட்டமிட்டதுதான் உண்டு.

    எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர். யாரை நியமிப்பது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் டெல்லி தலைவர்கள் தமிழக தலைகளிடம் ஆலோசனை கேட்போமே என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

    அழைத்து கேட்டவர்கள் எல்லோருமே தனக்கு அந்த பதவியை தர வேண்டும் என்பதையே முதல் கோரிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் போய் ஆலோசனை கேட்டோமே என்று டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

    • டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
    • கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே கடினம். வரப்பில் ஏறும் நண்டை மற்ற நண்டு இழுத்து தள்ளுவது போல்தான் கோஷ்டி பூசல் நிகழும்.

    ஆனால் கே.எஸ்.அழகிரியின் அதிர்ஷ்டம் 4 ஆண்டுகளை கடந்தும் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய தலைவர் நியமனம் பற்றி விவாதம் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

    தற்போது பாராளுமன்ற கூட்டம் முடிந்துவிட்டதால் அடுத்தக்கட்டமாக கட்சி மேலிடம் கட்சி பணிகளை கையில் எடுக்கும். எனவே விரைவில் கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.

    ஆனால் கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. களத்தில் நிற்கும் வரை கிடைக்கும் பந்துகளை அடித்து ஆடுவது என்ற பாணியில் தீவிரமாக உள்ளார்.

    வட்டார தலைவர்கள் மாநாடு விரைவில் நடத்தவிருப்பதால் வட்டாரங்களை பிரிக்காதவர்கள் பிரித்து வருகிற 14-ந்தேதி தன்னிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதை நிறுத்தி வைக்க டெல்லி சென்று போராடி இருக்கிறார்கள் எதிரணியினர். ஆனால் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காததால் ஆட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் அழகிரி. 'நான் தலைவராக இருக்கிறேன். எனது பணியை நான் செய்கிறேன்' என்கிறார் கூலாக.

    • தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.

    எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர்களை வருகிற 4-ந்தேதி டெல்லிக்கு வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அழைத்துள்ளார்.

    மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, 8 எம்.பி.க்கள் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    இவர்களுடன் டெல்லியில் அகில இந்திய தலைவர் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும் கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடையாளஅட்டை வழங்குவதில் பல விதிமுறைகளை பா.ஜ.க. அரசு புகுத்தியிருக்கிறது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை. அதேபோல, 100 நாள் வேலை திட்டத்திலும் பி.பி.எல். அட்டை இருப்பவர்களுக்கு தான் வேலை என்று இதுவரை நிர்ப்பந்தம் செய்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதித்துள்ள நிபந்தனையின்படி 100 நாள் வேலை திட்டத்திற்கு பி.பி.எல். அட்டை கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது.

    இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமப்புற தொழிலாளர்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதற்கான பி.பி.எல். அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.
    • விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று நாலரை ஆண்டு காலத்தில் சட்ட மன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தந்திருக்கிறார்.

    அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினர் டெல்லியை நோக்கி படையெடுத்துக் கொண்டு உள்ளனர் இவர்களுக்கு எல்லாம் நான் கேட்கும் ஒரே கேள்வி என்ன வென்றால் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாரையும் நசுக்கி வருகின்றது அதானிக்கும் அம்பானிக்கும் பொது மக்கள் பணத்தை தாரை வார்த்து கொடுத்தார்கள் என்று பாராளுமன்றத்தில் முறையாக கேள்வி கேட்டு பாராளுமன்றத்தை முடக்கிய நேரத்தில் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து அவர் வாழும் வீட்டை பறித்து வீதிக்கு அனுப்பினார்கள்.

    அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது இந்த சூழ்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பி.ஜே.பி. அரசை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கே.எஸ்.அழகிரி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
    • பதவிகளை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

    கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு பாராளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்தது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இதனால் தலைவர் மாற்றம் பற்றி டெல்லி மேலிடம் பரிசீலிக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகள் ஆவதால் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    தமிழகம் உள்பட 4 மாநில தலைவர்கள் மாற்றம் மற்றும் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் நியமனததை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் புதிய தலைவரை நியமிக்கும் போது கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு இணக்கமாக செல்லக் கூடியவரே நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    இப்போது டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதி மணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் உள்பட சிலர் பதவிகளை பெற காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்களில் யாரை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. யாரை பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்காததால்தான் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் கே.எஸ்.அழகிரி இன்று மாலை டெல்லி செல்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    அழகிரியின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பதவி நீட்டித்தாலும் சரி, புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் சரி 5 செயல் தலைவர்கள், மாநில பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவிகளை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது.

    • முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
    • தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. ராகுலும் அமெரிக்காவில் இருந்து திரும்பிவிட்டதால் நிர்வாகிகள் நியமனம் உடனடியாக தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் தலைவர் பதவிக்கு குறி வைத்து தமிழக காங்கிரஸ் பெருந்தலைகள் டெல்லியை சுற்றி கொண்டிருக்கின்றன.

    டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், கார்த்தி ப.சிதம்பரம் என்று பலர் பதவி பெறும் போட்டியில் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இதில் முக்கிய விசேஷம் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அவர்களின் செல்வாக்கு தான் தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்.

    காங்கிரசில் பதவி பெற கீழ்மட்டத்தில் மட்டுமல்ல. மேல்மட்டத்திலும் அப்படித்தான்.

    • தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
    • தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன்.

    அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?

    தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் அடிபடுகிறது. இன்னொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை புதிய தலைவருக்கு வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

    இது பற்றி திருநாவுக்கரசர் கூறும்போது, "அழகிரி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அவர் மாற்றப்படலாம். அல்லது அவரே தலைவராகவும் தொடரலாம். எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். அதே நேரம் இங்குள்ள முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலா 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார்கள்.

    நான் ஒருமுறைதான் இருந்திருக்கிறேன். எனவே எனக்கு மீண்டும் கட்சி தலைவர் பதவி கொடுத்தால் உண்மையாக பணியாற்ற தயாராக இருக்கிறேன். தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளேன். அமைச்சராக 10 வருடம் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. நான் 30 வயதில் இருக்கும் போதே எனது துறையின் கீழ் 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியாற்றினார்கள். மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறேன். 50 வருட அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது. எனவே முதல்வர் ஆகும் தகுதி கூட எனக்கு உண்டு என்பதை நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரசில் இருந்து கொண்டு அப்படி ஒரு கனவு காண முடியாது என்கிற யதார்த்தமும் தனக்கு தெரியும்" என்றார் ஆதங்கத்துடன்.

    • மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.

    மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    ×