search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirunavukkarasar"

    • 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
    • நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

    சென்னை:

    காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

    கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

    288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

    இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல்போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி காங்கிரஸ் அருணாச்சலம் மன்றத்தில் ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி , பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் கோட்ட மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போராட்டக்காரர் திடீரென்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டித்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    • மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.

    மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.

    அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

    நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.

    நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.

    பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
    • பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்று மக்கள் குறைகேட்க வந்தார். அப்போது, அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் அக்கட்சியினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு, ''4 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் இங்கு வர்றீங்க. நன்றி சொல்லக்கூட வரல. அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.

    மேலும் பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள். மிகவும் சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காஸ் சிலிண்டர் குடோனை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களையும் பார்க்க முடியவில்லை'' என சரமாரியாக குற்றம்சாட்டினர்.

    அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ''இந்தப் பாலத்தை கட்டுவதற்கு குறைந்தது ரூ.50லட்சம் ஆகும். இதை நான் செய்ய முடியாது. இங்கு அமைச்சருங்க இருக்காங்க, எம்எல்ஏ இருக்காங்க. அவங்களப் போய் பாருங்கள். என்னோட ஆபீஸ்ல 24 மணி நேரமும் ஆட்கள் இருங்காங்க. அவங்ககிட்ட மனு கொடுங்க. நான் 4 நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்'' என்றார்.

    இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் திருநாவுக்கரசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக மனு அளித்து விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து அங்கிருந்து திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.
    • திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.

    தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவரை அந்த தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து தொகுதியில் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகமாக கூறுகிறார்கள்.

    அப்படியானால் திருச்சி தொகுதி காங்கிரசிடம் இருந்து கை நழுவுகிறதா என்று திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- "கடந்த முறை 4.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த முறை யார் யார், எங்கே போட்டியிட்டார்களோ... பெரும்பாலும் அதுவே இந்த முறையும் தொடர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!"

    • தனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு தனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று நான் வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு எனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    என் மீது அன்பு கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது பிறந்த நாளன்று தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்பி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

    அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.

    மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

    அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

    3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவர் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவரது தமக்கையின் திருநாமம் திலகவதி. பெற்றோர் இறந்து விட தமக்கை திலகவதியின் அரவணைப்பில் வளர்ந்தார் மருள்நீக்கி. இவர் திருப்பாதிரிப்புலியூர் சென்று சமண நூல்களைக் கற்று, சமண சமயத்தைத் தழுவி ‘தருமசேனன்' எனப்பெயர் சூடிக்கொண்டார்.

    இதனால் மனம் நொந்த திலகவதி அருகிலுள்ள திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் வந்தடைந்தார். அங்கேயே தங்கியிருந்து அனுதினமும் ஆலயத்தை தூய்மை செய்து, ஈசனுக்கும் அம்பாளுக்கும் மலர் தொடுத்து சாத்தி வழிபட்டு வந்தார். அதோடு தன் தம்பியை நல்வழிப் படுத்துமாறு இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

    ஒரு நாள் தரும சேனனை சூலை நோய் (வயிற்றுவலி) தாக்கியது. சமணத் துறவிகளால் தரும சேனனின் நோயைத் தீர்க்க முடியவில்லை. இதனை அறிந்த திலகவதி, தனது தம்பியை தன்னோடு அழைத்துக் கொண்டு ஈசனின் சன்னிதிக்குச் சென்று, திருநீற்றை எடுத்து தருமசேனனின் அடிவயிற்றில் தடவி விட்டார். அதோடு வாயில் உண்பதற்கும் கொடுத்தார். என்ன ஆச்சரியம். அதுவரை எந்த மருந்து கொடுத்தும் தீராத அந்த நோய், உடனடியாக தீர்ந்தது. தேவாரப் பதிகமும் பாடத் தொடங்கினார். அந்த பாடலின் இனிமையில் கரைந்த இறைவன், “இன்று முதல் நீ திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுவாய்” என்று அசரீரியாக அருளினார்.

    அதன்பிறகு சிவதல யாத்திரை தொடங்கினார் திருநாவுக்கரசர். பிற சமயத்தவர்களால் பல இன்னல்களை அடைந்து, ‘சிவாய நம’ என்ற மந்திரத்தால் அதில் இருந்து மீண்டு வந்தார். மறைந்து போயிருந்த பல ஆலயங்களை மீட்டெடுத்தார். பல சிவாலயங்களை தரிசித்து, இறுதியில் திருப்புகலூர் வந்தடைந்தார். அவரது பற்றற்ற நிலையையும், பக்தியையும் உலகிற்கு காட்ட விரும்பினார் சிவபெருமான். அதன்படி அவர் உழவாரப் பணிகள் செய்த இடத்தில் எல்லாம், பொன்னும், நவமணிகளும் கிடைக்கும்படிச் செய்தார். ஆனால் அதையெல்லாம் சிறிதும் மனசஞ்சலம் இல்லாமல் ஆலய தடாகத்துக்குள் வீசி எறிந்தார், திருநாவுக்கரசர்.

    பின்னர் நடன மங்கைகளை வரச் செய்தார். அவர்கள் வந்து திருநாவுக்கரசரின் முன்பாக நின்று, கூந்தல் அவிழவும், ஆடைகள் நழுவும் படியாகவும் ஆடிப்பாடி அவரை மயக்க முற்பட்டனர். ஆனாலும் மனம் பிறழாத திருநாவுக்கரசர், உழவாரப் பணியில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இதையடுத்து இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று கருதி பெண்கள் அங்கிருந்து அகன்றனர்.

    ஒரு கட்டத்தில் சித்திரை மாத சதயம் நட்சத்திர நன்னாளில், திருப்புகலூர் ஈசனுடன் ஒன்றிப் போனார் திருநாவுக்கரசர். இந்த விழா திருப்புகலூர் சூளிகாம்பாள் சமேத அக்னி புரீஸ்வரர் திருத்தலத்தில் ஐதீக விழாவாக நடைபெறுகிறது.

    திருநாவுக்கரசரின் அற்புதம்

    திருவையாறு அருகிலுள்ள திங்களூரில் வாழ்ந்து வந்தார் அப்பூதியடிகள் எனும் சிவபக்தர். இவர் திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பினையும், சிவபெருமான் அவருக்கு அருளிய அருட்திறத்தையும் கேட்டு, திரு நாவுக்கரசரை நேரில் காணாமலேயே அவர் மேல் பெரும் பக்தி கொண்டார்.

    தனது ஊரில் தான் அமைத்த நூலகத்திற்கு ‘திருநாவுக்கரசர் வாசக சாலை’ எனவும், தண்ணீர் பந்தலுக்கு ‘திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்’ எனவும், திருமடத்திற்கு ‘திருநாவுக்கரசர் திருமடம்’ எனவும், அன்னதான சத்திரத்துக்கு ‘திருநாவுக்கரசர் அன்னதான சத்திரம்’ எனவும், தன்னுடைய பிள்ளைகள் இருவருக்கும் ‘பெரிய திருநாவுக்கரசு’, ‘சின்ன திரு நாவுக்கரசு’ எனவும் பெயரிட்டிருந்தார்.

    ஒருமுறை திருநாவுக்கரசர் திங்களூர் பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவர் பெயரில் அமைந்திருந்த அனைத்தையும் கண்டு வியப்புற்றார். அதற்கு காரணம் யார் என்று விசாரிக்க, அப்பூதியடிகள் பற்றி தெரியவந்தது. உடனே திருநாவுக்கரசர், அப்பூதியடிகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு திருநாவுக்கரசருக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த வீடும் கூட ‘திருநாவுக்கரசர் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்பு நின்று “அப்பூதியாரே! அடியேன் திருநாவுக்கரசு வந்திருக்கிறேன்” எனக்கூறி அழைத்தார்.

    வந்திருப்பவர் திருநாவுக்கரசர் என்பதனை அறிந்த அப்பூதியடிகள், தம் கைகளைத் தலைமேல் குவித்துக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிய அவர் திருப்பாதங்களைப் பணிந்து தொழுதார். பின்னர் திருநாவுக்கரசரை இருக்கையில் அமரச் செய்து தமது குடும்பத்துடன் பூஜித்து வழிபட்டார். திருநாவுக்கரசரைத் தமது இல்லத்தில் அமுதுண்ண வேண்டினார். திருநாவுக்கரசரும் அதற்கு இசைந்தார்.

    அறுசுவை உணவு தயாரானது. திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழை இலை அரிந்து வரும்படி, தன்னுடைய மூத்த மகனை அனுப்பினார் அப்பூதியடிகள். ஆனால் வாழை இலையை எடுத்துவரும் வழியில் அவனை பாம்பு தீண்டிவிட்டது. இருப்பினும் வாழை இலையை கொண்டு வந்து பெற்றோரிடம் கொடுத்து விட்டு, தன்னை பாம்பு தீண்டிய விஷயத்தை சொல்லி விட்டு இறந்து போனான்.

    அப்பூதியடிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘சிவனடியார் தன் வீட்டில் உணவருந்தும் வாய்ப்பை தான் இழந்து விடுவோமே’ என்று கருதிய அப்பூதியடிகள், மகன் இறந்ததை மறைத்து, திருநாவுக்கரசருக்கு உணவளிக்க முன்வந்தார்.

    உணவருந்தும் முன் ‘சிவாய நம’ என்று ஓதி, அனைவருக்கும் திருநீறு வழங்கினார், திருநாவுக்கரசர். அப்போது அப்பூதியடிகளின் மூத்த மகனைக் காணவில்லை. அது குறித்து கேட்டார் திருநாவுக்கரசர். ஆனால் அப்பூதியடிகள், “இனி அவன் உதவமாட்டான்” என்று கூறினார்.

    என்ன ஏதென்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி கேட்கையில் தான், அவனை பாம்பு தீண்டியதும், அவன் இறந்து போனதும் தெரியவந்தது.

    அதைக் கேட்டு அதிர்ந்த திருநாவுக்கரசர், “எங்கே பிள்ளை? அவனை உடனே திங்களூர் கயிலாசநாதர் ஆலய மண்டபத்திற்கு கொண்டுவாரும்' எனக்கூறினார்.

    அனைவரும் இறந்த சிறுவனின் உடலோடு ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு, “ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை' எனத் தொடங்கும் ‘விடம் தீர்த்தப் பதிகம்’ பாடி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார், திருநாவுக்கரசர்.

    அனைவரது கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அப்பூதியடிகள் தன் குடும்பத்தோடு, திருநாவுக்கரசரின் திருவடிபணிந்து தொழுதார்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ தூரத்திலும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும், திருநள்ளாறிலிருந்து 11 கி.மீ தூரத்திலும் திருப்புகலூர் அமைந்துள்ளது.
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 7,39,241 ஆண்கள், 7,68,940 பெண்கள் மற்றும் 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,08,963 வாக்காளர்கள் உள்ளனர்.

    இது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. வேட்பாளர் சாரு பாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆனந்த்ராஜ், நாம் தமிழர் கட்சியில் வினோத் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 144 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 68.89 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும், 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)-29,742

    இளங்கோவன் (தே.மு.தி.க.)-7,124

    சாருபாலா (அ.ம. மு.க.)-4,991

    முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் இருந்தார்.
    கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #votemachineissue

    கோவில்பட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும், நடக்க உள்ள தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அகற்றப்படுவது உறுதி. 23-ந் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்த வரை மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை எப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வாக்களிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் மோடியை ஆதரித்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவின் பினாமியாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.

    காங்கிரசை பொறுத்த வரை தலைவர் ராகுல் காந்தி தேவையான நேரத்தில் தேவையான மாற்றத்தை செய்வார். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் கொண்டு செல்லப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பெட்டிகளை மாற்றவே துணை முதல்வர் வாரணாசி சென்று, அங்கு பிரதமரை சந்தித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து அங்கு ஏதாவது பேசப்பட்டதா?, அங்கு சென்றதற்கும், பெட்டிகள் மாற்றப்படவும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என இதையெல்லாம் ஆராயப்பட வேண்டிய வி‌ஷயம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி உறுதியானது. அந்த பயத்தில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, தேர்தல் சட்டம் மற்றும் விதிமுறைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே கண்ணியத்தோடு அந்தப் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    ×