search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு வழக்கு"

    • அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
    • தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.

    இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.

    தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணையின்போது வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார்.

    இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். இந்த வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    விசாரணையின்போது இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை நடந்த இடம் மற்றும் ஜெயலலிதாவின் அறையில் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் 8 செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்து, அதில் உள்ள விபரங்களை கொண்டு விசாரணை நடத்துவதற்காக அந்த செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தையும் நேற்று ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி.போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே வருகிற 28-ந் தேதி ஊட்டி செசனஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அந்த சமயம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது. இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    அதன் அடிப்படையில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணையை அறிக்கையாக வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளரான நடராஜிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை பதிவும் செய்து கொண்டனர்.

    செல்போன்களை விசாரணைக்கு கேட்டது, கொடநாடு பங்களாவில் கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை கோர்ட்டில் ஒப்படைத்தது என அடுத்தடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் யார் யாரிடம் விசாரணை நடந்தது, புதிதாக யாரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் தெரியவரும்.

    • கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
    • கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    நீலகிரி:

    கொலை, கொள்ளை நடந்த கொடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    • கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
    • பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

    கொடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், இந்த வழக்கில் தொடர்புடைய விபத்தில் இறந்த கனகராஜ் மற்றும் சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து, 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

    அந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் வகையில், கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

    • தி.மு.க.வின் மீது கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா. அவரது மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24-ஆம் நாளன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கொடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ண பகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்டது.

    இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகி விட்ட போதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

    விசாரண மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்று வரை அவிழ்க்கப்பட வில்லை.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. தி.மு.க.வின் மீது கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்குக்கும், தமிழக காவல் துறையின் மாண்புக்கும் சவால் விடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆளும் தி.மு.க. அரசு கூடுதல் கவனமும், அதி முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்டு 1-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் பதில் அளித்து கூறியதாவது:-

    கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

    இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. நான் துணை முதலமைச்சர் ஆக இருந்த போது எந்த ஒரு அதிகாரமும் என்னிடம். இல்லை.

    நான் வகித்த துறையில் மட்டுமே அமைச்சராக அதிகாரம் இருந்தது. கொடநாடு கொலை வழக்கில் விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இரட்டை இலை வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கை தொடரும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தற்போதைய முதலமைச்சர் கொடநாடு வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்துவோம் என்று சொன்னார்கள். அவர் ஆட்சி வந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது/

    ஆனால் அதில் ஒரு சிறிய அளவு கூட முன்னேற்றம் இல்லை என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. பாஜக தலைவர்கள் கூட்டணிக்காக எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை. அதிமுக விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாதது என்று நீதிமன்றம் அறிவித்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

    கவர்னர் மீது குற்றச்சாட்டை வைத்து ஒரு நீண்ட கடிதத்தை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவர் யார் என்பதில் ஜனாதிபதி அண்ணாமலைக்கும் இடையே போட்டி. அதை பாஜக மேலிடம் தான் முடிவு பண்ண வேண்டும். நாங்கள் கட்சி நடத்துகிறோம் தேர்தலில் போட்டியிட உள்ளோம் உயர்நீதிமன்றம் கொடுக்கும் சின்னத்தின் அடிப்படையில் போட்டியிட உள்ளோம். டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்.
    • அதிமுக, இரட்டை இலை வழக்கில் சட்டப்போராட்டம் தொடர்கிறது.

    சென்னை:

    சென்னை பசுமை வழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்தியலிங்கம் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

    இதன்பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்தது திமுக. அதிமுக, இரட்டை இலை வழக்கில் சட்டப்போராட்டம் தொடர்கிறது. பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
    • ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் கொடநாடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், அங்கு பணிபுரிபவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் இறப்பதற்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனது ஆஸ்தான ஜோதிடரை சந்தித்தாக தகவல் வெளியானது.

    இதையடுத்து அவரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணன், வழக்கினை ஜூன் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

    • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர். இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதனை ஏற்று இன்று 3 பேரும் கோவை காந்தி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் கொடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கொடநாடு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பது சம்பந்தமாகவும், வழக்கு குறித்தும் விசாரித்தனர்.

    இவர்கள் 3 பேர் தவிர கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜேஷ், வினோத் ஆகிய 3 பேரும் இன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நேற்று ஊட்டி பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களாக கூறப்படும் சயான், வாளையாா் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சமி ஆகியோா் ஆஜராகினா். மேலும் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை ஆகியோா் ஆஜராகினா்.

    விசாரணையின்போது, தொலைத்தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் கோரப்பட்டது.

    இதனை ஏற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கை பிப்ரவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த எஸ்.பி.முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழக்கின் விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை, அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் அடுத்த கட்ட விசாரணை பற்றியும், அடுத்து யாருக்கு எல்லாம் சம்மன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், குன்னூர் டி.எஸ்.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
    • வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆஜரானார்.

    இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

    இதை ஏற்று வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பா விசாரணைக்காக ஆஜராவார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

    இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படையினர் சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் அவர் விசாரணைக்காக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2017-ல் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர், சி.பி.ஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சி.பி.ஐ தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு புலனாய்வுத்துறை அனுப்பியுள்ளது.

    • கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து தற்கொலை செய்த தினேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் தினேசின் குடும்பத்தினர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் சென்றனர்.

    இதுபற்றி தினேசின் தந்தை போஜன் கூறுகையில் நானும், எனது குடும்பத்தினரும் பணிக்கு சென்றபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டு சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர்.

    கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

    மேலும் விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 பேர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சேலம் மாநகர சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பழைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று தனிப்படையில் இணைந்தனர். இவர்கள் விரைவில் பணியை தொடர உள்ளனர்.

    ×