search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம் அருவி"

    • கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது.
    • இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும்.

    தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது.

    கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் வறட்சியுடன் காணப்பட்ட ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

    நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனும், இதமான காற்றும் வீசி வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம், தென்காசி பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதேபோல் செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் இன்று காலை முதல் ஐந்தருவி, மெயின் அருவியில் சீராக தண்ணீர் விழ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து இருந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் ஆர்வமுடன் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். எனினும் பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றுருவி பகுதிகள் வறட்சியுடனே காணப்பட்டு வருகிறது.

    இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் தொடர் சாரல் மழை பெய்தால் சிற்றுருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள்.
    • நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    தென்காசி:

    குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காலநிலை நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்து 2 வாரங்களை கடந்த நிலையிலும் சீசன் தொடங்காமல் தாமதமாகி வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். குளுகுளு சீசன் எப்போது தொடங்கும், அதை ஆனந்தமாக அனுபவிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையும் விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மாலையில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்தது.

    இதனால் மாலை சுமார் 6 மணிக்கு குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் குற்றாலத்திலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து சீசன் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றுருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்திலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் புளியரையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    ஐந்தருவில் உள்ள 4 கிளைகளில் மிதமான அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதலும் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இன்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் ஐந்தருவியில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து தொடர்ந்து வீசி வரும் குளிர்ந்த காற்றின் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் குற்றால சீசன் முழுமையாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
    • ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலமும் ஒன்றாகும்.

    இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவிகளில் சீசன் காலக்கட்டங்களில் வெளிமாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சீசன் களைகட்டும்.

    இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 4-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்காசியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்ய தொடங்கியது.

    இதனால் தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    இன்று காலை முதல் குற்றால பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் குளிக்க வந்தனர். அங்கு இன்று காலையில் வெயில் அடித்தாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    • தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
    • கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.

    இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.

    தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.

    இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.

    கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் நீராடி சென்றனர்.
    • சபரிமலையிலும் மண்டல பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் முழுவதுமாக குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய அருவிகள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியிலும் போதிய மழை பொழியாததால் நீரோடைகளும் நீரின்றி காணப்படுகின்றன.

    குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளுக்கு மிகவும் குறைந்த அளவு நீர்வரத்து இருந்த நிலையில் கடந்த வாரம் சிற்றருவி வறண்டதால் வனத்துறையினர் சார்பில் சிற்றருவி மூடப்பட்டது.

    இருப்பினும் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் நீராடி சென்றனர். சபரிமலையிலும் மண்டல பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் முழுவதுமாக குறைந்தது.

    மேலும் சுற்றுலா பயணிகளும் தண்ணீர் இல்லாததால் ஆர்வம் காட்டாததால் அருவிக் கரைகள் அனைத்தும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

    பாலருவிலும் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பாலருவியும் மூடப்படும் என கூறப்படுகிறது.

    • குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை முதல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.

    குறிப்பாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் 1 மணி அளவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும் சபரிமலை ஐயப்பன் ஆபரண பெட்டியினை கண்டு வழிபட்டு செல்வதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

    • இன்று கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமை சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பூஜைக்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பலத்தமழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இன்று காலை வரையிலும் மழை நீடித்தது.

    குறிப்பாக மாநகர பகுதியான பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு 54 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பழையபேட்டை முதல் வழுக்கோடை, நயினார்குளம் சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 15 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1017 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் 93.70 அடி நீர்இருப்பு உள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 83.40 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1608 கனஅடிநீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் சிறிது நேரம் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணைப்பகுதியில் 30 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 31 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இந்த 2 அணைகளும் நிரம்பிவிட்டதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கருப்பாநதியில் 62 அடியும், அடவிநயினார் அணையில் 81.25 அடியும் நீர் இருப்பு உள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 77 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் நேற்று இரவு முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு சற்று தணிந்ததால் அதில் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமை சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பூஜைக்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். ஆனால் குளிக்க அனுமதி கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பலத்தமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10.8 சென்டிமீட்டர் மழை பெய்தது.திருச்செந்தூரில் 49 மில்லிமீட்டரும், கடம்பூரில் 55 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.

    எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டனம், காயல்பட்டினம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் நேற்று முழுவதும் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதியது.

    • கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதன்பின்னர் ஒரு வாரத்திற்கு சற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து பிசான பருவ சாகுபடிக்காக பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 22 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாநகர பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது பலத்த மழையும், சில இடங்களில் சாரலும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்தாலும், இன்னும் ஒரு மாதம் வரை பருவகாலம் இருப்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 123 கனஅடி நீரில் சுமார் 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் பெய்து வருகிறது. தென்காசியில் 13 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று இரவில் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து இருப்பதால் 2 அருவிகளிலும் குளிக்க தடை நீடிக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கயத்தாறு, மணியாச்சி, கோவில்பட்டி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஓட்டப்பிடாரம், குலசேகரப்பட்டினம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விளாத்திகுளம், திருச்செந்தூரில் லேசான சாரல் பெய்தது.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி தவிர்த்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் இன்று காலை முதல் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் நீராடினர்.

    • கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
    • அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரியில் இன்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 57 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது.

    இதன் காரணமாக இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை மெயினருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தையும் சேர்த்து அனைத்து கிளைகளிலும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை குளித்து மகிழ்ந்தனர். மழையால் மத்தளம்பாறை அருகே உள்ள செங்குளம் முழு கொள்ளளவை எட்டியதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு இன்று காலை வரை சுமார் 45 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சுமார் 72.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

    ×