search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பு கட்டும் நிகழ்ச்சி"

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெரும் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    மைசூருக்கு அடுத்தப்படியாக இங்குதான் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவையொட்டி நேற்று காலை காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடந்தது.

    தசரா திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். கோவிலில் தினசரி காலை, மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

     திருவிழா தொடங்கியதையொட்டி பல்வேறு இடங்களில் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றை வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.

    இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வருகிற 24-ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வார்கள்.

    அங்கு மகிஷாசூர சம்காரம் முடிந்த பின், அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் ஊர் பவனி சென்று விட்டு மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் காப்பு அவிழ்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

    தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

    • சுந்தரராஜ பெருமாளுக்கு இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரையின் வைகை தென்கரை பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா முடிந்த அன்றைய நாளை வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை மாலையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    பின்னர் 6 மணி முதல் 7.10-க்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா வந்து பதினெட்டாம்படி கருப்பண சாமி சன்னதி பெற்று உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடு ஆகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவே கள்ளழகர் பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழிநெடுகிலும் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

    4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்று மாவடியில் கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் பக்தர்கள் வெள்ளத்தில் அன்று இரவு கள்ளழகர் தல்லாக்குளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தடைகிறார்.

    5-ந் தேதி அதிகாலை தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ×