சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி

சுந்தரராஜ பெருமாளுக்கு இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி
Published on

மதுரை

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

மதுரையின் வைகை தென்கரை பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா முடிந்த அன்றைய நாளை வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை மாலையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

பின்னர் 6 மணி முதல் 7.10-க்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா வந்து பதினெட்டாம்படி கருப்பண சாமி சன்னதி பெற்று உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடு ஆகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவே கள்ளழகர் பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழிநெடுகிலும் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்று மாவடியில் கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் பக்தர்கள் வெள்ளத்தில் அன்று இரவு கள்ளழகர் தல்லாக்குளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தடைகிறார்.

5-ந் தேதி அதிகாலை தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com