search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்மை எது"

    • வைரல் புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது.
    • இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல என தெரியவந்துள்ளது.

    தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார். கடைகளில் கீரை மற்றும் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. நிர்மலா சீதாராமனும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் காய்கறி வாங்கியபோது வெங்காயம் வாங்கியது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெங்காயம் குறித்து பலரும் ட்ரோல் செய்தனர். இந்த புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது. அதில், 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடவே மாட்டார் என்று பாராளுமன்றத்தில் கேள்விப்பட்டோம். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் பக்கத்து வீட்டுக்கு வெங்காயத்தை வாங்குகிறாரா? கிண்டலாக கூறப்பட்டிருந்தது.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. எனவே, இதுபற்றி இந்தியா டுடேயின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. இதில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்குவது போன்ற புகைப்படம் போலியானது என்பது தெரியவந்தது. வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வெங்காயத்தை இணைத்து, சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    அமைச்சர் வெங்காயம் சாப்பிடுகிறரா? இல்லையா? என்பது உண்மைச் சரிபார்ப்புக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல.

    இதுதவிர நிதியமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில், அவர் காய்கறி வாங்கும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களையும் வீடியோவையும் காண முடிகிறது. இவற்றில் எங்கும் அவர் வெங்காயம் வாங்குவதைக் காண முடியவில்லை. வீடியோவில் உள்ள ஒரு பிரேம், வெங்காயங்களைக் கொண்ட வைரல் புகைப்படத்துடன் மிகவும் ஒத்ததாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு வெங்காயம் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுவதாக குற்றச்சாட்டு
    • அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று https://thedealership.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கான டீலர்ஷிப் நாங்கள். எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பயனளிக்கும் எரிவாயு நிறுவனத்தை இறுதி செய்வது பற்றி வாடிக்கையாளர் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பதாரர் விவரங்களை பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் விண்ணப்ப படிவமும் உள்ளது.

    ஆனால், அந்த இணையதளத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது. 'சில இணையதளங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுடன், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை மோசடியாக வழங்குகின்றன. மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் அருகிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பிரிவு அலுவலகத்தையோ அல்லது அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியிருந்தது.

    இது தொடர்பாக பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    https://thedealership.in என்ற இணையதளம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெயரில், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை வழங்குவதாகக் கூறுகிறது.

    ️இந்த இணையதளம் போலியானது. உண்மையான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளமான 'https://iocl.com' என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்று செய்தி பரவியது
    • ஹெல்ப்லைன் 1098ஐ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து இயக்கும்.


    குழந்தைகள் உதவி எண் 1098 மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்றும் நாளிதழில் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் உதவி எண் 1098 இருக்காது என்றும், குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்றும் செப்டம்டபர் 14ம் தேதி செய்தி வெளியிடப்பட்டதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த செய்தியின் தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்கள், பொது மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் உண்மை நிலையை சரிபார்க்காமல் எழுதப்பட்டுள்ளது.

    குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098 உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், அது ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்று வெளியிடப்பட்ட அந்த செய்தி முற்றிலும் தவறானது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சிறார் நீதிச் சட்டம் 2015 இன் விதிமுறைகளுக்கு இணங்க, ஹெல்ப்லைன் 1098ஐ அமைச்சகம் தொடர்ந்து இயக்கும். 1098-க்கான அழைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு வரும். மேலும் குழந்தைக்குத் தேவையான உதவிகள் தற்போது வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை போன்ற கூடுதல் அவசர உதவி தேவைப்பட்டால், உள்ளூர் காவல்துறையும் உஷார்படுத்தப்படும்.

    இவ்வாறு பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது

    • போலி வலைத்தளங்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அரசுத் துறைகள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் இப்போது இணைதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. அதேசமயம் அரசுத் துறைகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான சமூக வலைத்தள பக்கங்களும் தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன. எனவே இவற்றை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது போலி செய்திகள் மற்றும் போலி வலைத்தளங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

    அவ்வகையில், எல்லைப் பாதுகாப்பு படையின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் திறக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூறி உள்ளது. @BsfIndia0 என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கு அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும், எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @BSF_India என்றும் தெரிவித்துள்ளது. 

    • சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது
    • அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது

    பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டையே புரட்டிப் போட்ட இந்த பேரிடர் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒரு வீடியோ கராச்சியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாக்கப்படுகிறது.

    அந்த வீடியோவில், சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோ கராச்சியில்தான் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து சந்தேகம் எழுப்பட்டது. இதுபற்றி கூகுள் தேடல் மூலம் ஆய்வு செய்ததில், அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பதும், உண்மையில் அந்த வீடியோ ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சுனாமியின்போது வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி என்பதும் தெரியவந்தது. 2011 ஜப்பான் சுனாமி: இஷினோமாகி என்ற தலைப்பில் யூடியூப் சேனலிலும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், அந்த வீடியோவுக்கும் பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், வீடியோ ஜப்பானில் எடுக்கப்பட்டிருப்பதும் உறுதியாகி உள்ளது.

    • நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினர்.
    • நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம், நகைகளை கைப்பற்றியதாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. 

    அதில், 'திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் 16 அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரின் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம்... 150 கோடி ரூபாய் ரொக்கம்... 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள்!!!' என்று பதிவிடப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில், ஏராளமான நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் வீடியோவுடன் பகிரப்படும் தகவல் குறித்து கூகுள் மூலம் தேடும்போது, ஏற்கனவே இந்த வீடியோவை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலரான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையுடன் தொடர்புபடுத்தி கடந்த ஆண்டு வெளியிட்டதும், அது உண்மைல்ல என்றும் தெரியவந்தது. 

    உண்மையில் அந்த வீடியோவது, தமிழகத்தின் வேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் மீட்டு, பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டியபோது எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வீடியோவில் 'மாவட்ட காவல்துறை, வேலூர்' என தெளிவாக இருக்கிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அதே வீடியோவையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

    எனவே, தற்போது பரவும் வீடியோவுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.

    • ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி தலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டிருந்தார்.
    • இந்த புகைப்படத்தை மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர்.

    ஜப்பான் மின்சாரத்துறை மந்திரியின் புகைப்படம் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதற்காக பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்துறை மந்திரி 20 நிமிடங்கள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது 2015ல் வெளியான புகைப்படம் என்பதும், அதில் தலைகுனிந்து நிற்பவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி இல்லை என்பதும் தெரியவந்தது. புகைப்பட ஏஜென்சியான நிப்பான் நியூஸ் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, படவிளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, புகைப்படத்தில் இருப்பவர் ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டகாஹிரோ ஹசிகோ ஆவார். அவர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் முன்னிலையில் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி என்ற கூற்று உண்மையல்ல என்று தெளிவாகிறது.

    இந்த புகைப்படத்தை ஜப்பான் மந்திரியுடன் தொடர்புபடுத்தி மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர். கடந்த மே மாதம் 6ம் தேதியில் இருந்து மீண்டும் இப்படம் வைரலானது. அதில், 'நீங்கள் மியான்மரில் மந்திரியாக இருந்தால் எப்போதும் குனிந்து ஒரு கட்டத்தில் விழுந்து இறந்துவிடுவீர்கள்' என்று தங்கள் கருத்தையும் பதிவிட்டு வைரலாக்கினர். பலமுறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

    தற்போது தமிழகத்தை தொடர்புபடுத்தி, வாசகத்தை மாற்றி இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சில இடங்களில் செடி வளர்ந்து மின்கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும், அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அவர் சொன்னதை வைத்து கேலி செய்யும் வகையில் இந்த புகைப்படத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். 

    • பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
    • பொதுமக்கள் தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது என அறிவுறுத்தல்

    சென்னை:

    மும்பை போலீசார் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காதீர்கள், அப்படி எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும், எச்சரிக்கையாக இருங்கள், என்று போலீசார் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் போலீசார் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் இது பற்றி ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுகிறார்கள். இதேபோல் மகாராஷ்டிர காவல்துறை கூறியதாக வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு எச்சரிக்கை தகவல் பரப்பப்பட்டது.

    ஒரு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் செய்த வித்தியாசமான விளம்பரப் பிரச்சாரத்தால்தான் இந்த பிரச்சனை ஆரம்பித்து, மும்பைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 140ல் தொடங்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், ஒரு கொலையை நேரில் பார்த்ததாகவும், அந்த கொலையை தனது போனில் படம் பிடித்ததாகவும், கொலையாளிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் கூறி உள்ளார். மறுமுனையில் அவரது உரையாடலை கேட்ட நபர் அதிர்ச்சியில் உறைய, 'இது புதிய நிகழ்ச்சிக்கான விளம்பர அழைப்பு' என்று கூறியிருக்கிறார்கள். இதுபோன்று பலரை தொடர்புகொண்டு பேசி உள்ளனர்.

    அந்த நபர் பேசியதை பதிவு செய்து காவல்துறையின் டுவிட்டர் மற்றும் ஹெல்ப்லைனில் பலரும் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே 140ல் தொடங்கும் எண்களில் இருந்து வந்தால் யாரும் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.

    இந்த தகவல் வேகமாக பரவ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைதானா? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

    இதுபற்றி, மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி விளக்கம் அளித்தார். ரோந்து காவல்துறையின் மொபைல் வேன்கள் தவறான எச்சரிக்கையை வெளியிட்டதாகவும், 140ல் தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எண்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

    மேலும், ஒருவர் தனது வங்கிக் கணக்கு விவரங்கள், OTP அல்லது கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு எண்ணை கொடுக்காத வரையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சைபர் போலீஸ் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

    எனவே, 140 என்று தொடங்கும் செல்போன் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் என்ற கூற்று உண்மையில்லை என்பது தெளிவாகிறது. இருப்பிலும் இந்த தகவல் மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொலைபேசியில் பேசும் மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்டறிந்து மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய நம்பர் ஆகியவற்றை வாங்கி மோசடியில் ஈடுபடுகிறது.

    மும்பையில் 140 என்று தொடங்கும் போன் நம்பரை எடுத்ததும் வங்கி பணம் மோசடி செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது.

    சென்னையில் இது போன்ற மோசடி இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2010ல் ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலானது. அது உண்மையான பாம்புதான் என்ற வகையில் கருத்து பகிரப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதேசமயம், இது உண்மையாக இருக்காது, ஏமாற்று வேலை என்றும் பலர் கமென்டில் பதிவிட்டனர்.

    இதையடுத்து இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடியபோது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார். எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. பழைய படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக்கி வருவதும் தெரியவந்தது.

    மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை சிவ சேனா முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும் என அதிருப்தி குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

    இந்த சூழ்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது. மகாராஷ்டிர முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுக்காவிட்டால் சகி நாகா ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன், என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்த பலரும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதையடுத்து, உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனமான பூம், இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட பதிவு வெளியான டுவிட்டர் கணக்கு பிடிஐ பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் போலியான கணக்கு என்பது கண்டறியப்பட்டது. அத்துடன், மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக, அன்னா ஹசாரே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

    மேலும், அந்த தகவலின் குறிப்பிட்டபடி மும்பை அந்தேரி கிழக்கில் அமைந்துள்ள சகி நாகாவில் ரெயில் நிலையம் இல்லை, மெட்ரோ நிலையம் மட்டுமே உள்ளது. எனவே, பிடிஐ பெயரில் வெளியிடப்பட்ட பதிவு போலியானது என உறுதி செய்யப்பட்டது.

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×