search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்மை எது"

    • ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
    • குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், இறந்துபோன சிறுவனும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்.

    சமீபத்தில் ஒரு இந்து சிறுவன், முஸ்லிம் சிறுவன் ஒருவனை குளத்தில் தள்ளி கொன்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.

    "இந்துக்களுக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு கற்பனை செய்து பார்க்க முடியாதது. லக்னோ நகரில் கிஷோர் எனும் இந்து சிறுவன் ஒருவன், 7-வயதான அப்துல் சமத் எனும் முஸ்லிம் சிறுவனை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, குழியில் தள்ளி கொலை செய்துள்ளான். இக்கொலை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் மேல் கொலை குற்றம் சாட்டப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்." எனும் செய்தியுடன் ஒரு பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டது.

    ஆனால் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்திகளின்படி, இறந்த குழந்தையின் தந்தை அகமது சஃபி என்பவர், முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது அண்டை வீட்டுக்காரர்களான ஹ்யூமா, அதிக், சைக்கா, அரிஃப், கலித் மற்றும் அந்த குழந்தையை தள்ளி விட்ட சிறுவன் ஆகியோர் மீது கொலை குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகாரளித்தார்.

    "எங்கள் இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாக, அவர்கள் அந்த சிறுவனை அனுப்பி என் மகனை கொலை செய்திருக்கின்றனர்" என அப்புகாரில் அகமது தெரிவித்திருக்கிறார்.

    ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காலா பாஹத் எனும் பகுதியில் ஒரு நீர்நிலையில் இறந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    "இந்த குற்றத்தில் எந்த மத சம்பந்தமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்" என லக்னோ மேற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவித்தார்.

    ஆக, முஸ்லிம் இனத்தை சேர்ந்த இரு குடும்பங்களின் விரோதத்தால் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்திற்கு, மத சாயம் பூசும் முயற்சியுடன் இந்த பொய்யான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

    • அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது.
    • காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம்.

    இந்து நாட்காட்டியில் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வரக்கூடிய மாதம், இந்துக்களுக்கு புனிதமான ஷ்ரவண அல்லது சாவன் மாதம். பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால், இந்த புனித மாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு உணவகத்தில் ராகுல் காந்தி அசைவ உணவை உண்பதாக அந்த வீடியோவை பதிவிட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

    "ராகுல் காந்தி சாவன் மாதத்தில் அசைவம் சாப்பிட உணவகம் வந்தார். அதனால்தான் மக்கள் அவரை சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் இந்து பக்தர் என்று சொல்கிறார்கள்" என்ற தகவலுடன் அந்த வீடியோ வலம் வருகிறது.

    அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தேடலில், பழைய வீடியோவை பொய்யான தகவலுடன் ஷேர் செய்தது தெரியவந்தது.

    குறிப்பாக இந்த வீடியோவை பூம் (BOOM) ஆய்வு செய்ததில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த ஆண்டு ஏப்ரல் 19, 2023 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில், டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சௌக் பகுதிக்கு ராகுல் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள "அல் ஜவஹர்" உணவகத்திற்கும் சென்றிருந்தார். "சாட்" மற்றும் "கோல் கப்பே" போன்றவற்றை விரும்பி உண்டார். உணவு மற்றும் உணவகங்களை குறித்த சிறப்பு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர் குணால் விஜயகருடன் சேர்ந்து உணவு உண்டார். அப்போது ராகுல் காந்தி உணவருந்திய போது ஒரு வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. ரம்ஜானைக் கொண்டாடுவதற்காக தர்பூசணி மற்றும் ரோஸ் சிரப்பின் சுவைகள் கொண்ட பிரபலமான கோடைகால பானமான "மொஹபத் கா ஷர்பத்" போன்றவற்றையும் அவர் ருசித்து பார்த்திருக்கிறார். ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை வைரலான வீடியோவுடன் ஒப்பிடும் போது, காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம். ஆனால், இது நடந்தது ரம்ஜான் மாதமான ஏப்ரல் மாதமே தவிர, ஜூலை மாதம் அல்ல.

    இதிலிருந்து வைரல் வீடியோ வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையல்ல என தெரிய வருகிறது.

    • சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
    • வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபியின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    பல சமயங்களில் சாலையில் திடீரென நின்றுபோன வாகனங்களை பலர் பின்னால் ஒன்றுகூடி தள்ள, என்ஜின் ஸ்டார்ட் ஆவதை பார்த்திருக்கிறோம். அதேபோன்று ரெயிலை தள்ளுவதுபோன்ற ஒரு வீடியோ கடந்த இரு நாட்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராணுவ வீரர்கள், போலீஸ் குழுக்கள், ரெயில்வே ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து ஒரு ரெயிலை தள்ளுவது தெரிந்தது.

    பல ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்ததால் டுவிட்டரில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது. நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றி சென்ற இந்திய ரெயில்வேயின் ரெயில் எதிர்பாராதவிதமாக நடுவழியில் நின்றுவிட்டதாகவும், அதன் பயணத்தைத் தொடர அனைவரும் தள்ளவேண்டியிருந்ததாகவும் வீடியோவை பகிர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர். சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

    இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேடியபோது அந்த வீடியோவுக்கும் பரப்பப்படும் தகவலுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

    பயணிகளுடன் சென்ற அந்த ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ரெயிலின் மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுப்பதற்காக அனைவரும் செய்த முயற்சியைத்தான் திரித்து பொய் செய்தியாக பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    ஜூலை 7, 2023 அன்று, ஹவுரா-செகந்திராபாத் வழித்தடத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தீப்பிடித்தன. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க, 3 பெட்டிகள் கொண்ட பின்பகுதியை உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் பிரிக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து தள்ளி நகர்த்தி உள்ளனர். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளை பிரிக்க, மக்கள் ரெயிலை தள்ளுவதைத்தான் வீடியோ காட்டுகிறது. வீடியோவில் உள்ளவர்கள் மற்றொரு இயந்திரம் வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்ததாக வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபி-யின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    இது குறித்து பேசிய ரெயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, "ஜூலை 7 ஆம் தேதி ரெயில் எண் 12703 தீ விபத்தின் போது ரெயிலின் பின்பக்க பெட்டிகளை தீயிலிருந்து காக்க, ரெயில்வே பணியாளர்களும் உள்ளூர் போலீசாரும் கைகோர்த்து பிரித்தனர். உடனடியாக செயலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி"என கூறினார்.

    இதே கருத்தை வெளியிட்டு தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

    எனவே, நின்று விட்டதால் ரெயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் செய்தி உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

    • நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    இந்தியாவில் நர்சிங் படிப்பானது மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) சமம் என்றும், நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பியிருப்பதாக கூறி ஒரு சுற்றறிக்கை மற்றும் நியூஸ் கார்டு போன்ற இமேஜ் வைரலாகி வருகிறது.

    இந்த தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை கூகுள் மூலம் தேடும்போது, அதுபோன்ற எந்த செய்தியும் நம்பகமான ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை. இந்திய நர்சிங் கவுன்சில் இணையதளத்திலும் அப்படி ஒரு அறிக்கையோ சுற்றிக்கையோ வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மேலும் தேடுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துருவ் சவுகான் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பதிவில், இந்த சுற்றறிக்கை போலியானது என குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய சுகாதாரத்துறையும் நேற்று இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "செவிலியர்கள் நர்சிங் அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பிஎஸ்சி நர்சிங் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும் என்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலியானது. இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம்" என தெளிவாக கூறப்பட்டிருந்தது.

    பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதே கருத்தை பதிவிட்டிருந்தது.

    எனவே, வைரலாக பரவும் சுற்றறிக்கை போலி என்பதும், நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • நோபல் கமிட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.
    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது.

    நான் மோடியின் மிக பெரிய ரசிகர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது-

    ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 'ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' என்றார்.

    நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.

    உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது
    • இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்று கூறி உள்ளது

    மின் கட்டணம் செலுத்த தவறுவோரின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களாக போலியான தகவல் பரவி வருகிறது. மக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த தகவல் வலம் வருகிறது.

    'வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவு 8.30 மணியளவில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாரியங்கள் அல்லது மின்விநியோகஸ்தர்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான மொத்த மின்கட்டணத் தொகை மற்றும் நிலுவைத் தேதி குறித்து எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கின்றனர். இதே பாணியில் இந்த போலி செய்தியும் உள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி ஏமாந்துவிடுகின்றனர்.

    தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அரசு காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இந்த தகவல் போலி எனவும், இந்த குறுந்தகவலை பயனாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

    மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் தகவலுக்கு பதில் அனுப்பினால், மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருடிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது.
    • மத்திய கல்வி அமைச்சகம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்விக் கொள்கையின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

    'புதிய கல்விக் கொள்கைக்கு சில மாற்றங்களுடன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்றங்களின்படி, இனி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இல்லை, எம்ஃபில் படிப்பு நிறுத்தப்படும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்' என அந்த வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி பலமுறை அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.

    இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், 10வது வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது எனக் கூறும் வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி போலியானது என்றும், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிபிசி ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
    • ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.

    2002 குஜராத் கலவரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது. தொடர்ச்சியான காலத்துவ மனநிலையை இந்த ஆவணப்படம் பிரதிபலிப்பதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், தடையை மீறி பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.

    இந்த சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிற்பதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர்.

    எனவே, இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, ராகுல் காந்தியுடன் நிற்பது பிபிசி ஆவணப்பட இயக்குனர் அல்ல, பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா என்பது தெரியவந்தது.

    கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியபோது இந்த புகைப்படம் பற்றிய உண்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றன. இதே புகைப்படத்துடன் மே 2022 முதல் வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், லண்டனில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த புகைப்படம் 2022ம் ஆண்டு மே 23ம்தேதி இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.

    ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த ஆவணப்படத்துடன் ஜெர்மி கார்பினுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

    எனவே, சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டதாக கூறி ட்விட்டரில் தகவல் வெளியானது
    • மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ.5.5 கோடி செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

    குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மோர்பிக்கு சென்று பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

    அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்காக குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்திருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இதுபற்றி தகவல் பெறப்பட்டதாக கூறி சகத் கோகலே என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    அதில், ``பிரதமர் மோடி சில மணி நேரம் வந்து சென்றதற்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த 135 பேரின் குடும்பங்களுக்கு மொத்தமே ரூ.5 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு, நிகழ்ச்சி மேனேஜ்மெண்ட் மற்றும் போட்டோகிராபிக்கு மட்டுமே 5.5 கோடி செலவு செய்துள்ளனர்'' எனப் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு வைரலான நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. அதில், சகத் கோகலே வெளியிட்ட தகவல் உண்மையல்ல என தெரியவந்தது.

    இதுதொடர்பாக PIBFactCheck தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் "ஆர்டிஐ சொன்னதாக மேற்கோள்காட்டி, ஒரு ட்வீட்டில் பிரதமரின் மோர்பி வருகைக்கு சில மணி நேரத்துக்கு ரூ.30 கோடி செலவானது என்று கூறப்பட்டது. அந்த தகவல் போலியானது. இது குறித்து RTI பதில் எதுவும் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
    • 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் கடந்த வியாழக்கிழமை வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிடிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்து போன ஒருவரின் உடல் அருகே சிறுவன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதில், இம்ரான் கான் பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர் என்று பதிவிட்டனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக இணையதளங்களில் தேடிய ஆய்வு செய்ததில், இது பழைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் வேறு தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடல் அருகே அவரது மகன் இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஹெல்மண்ட் மாகாணத்தில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சடலத்தின் அருகில் அவரது மகன் கண்ணீருடன் இருப்பதாக மற்றொரு நபர் பதிவிட்டிருந்தார். மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகள் எங்கே உள்ளன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆப்கான் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன்மூலம் இந்த புகைப்படம் பழையது என்பதும், எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது என்று பொய்யாக பகிரப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்
    • தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் நியூஸ் கார்டுகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், போராட்டத்தில் கைதான எடப்பாடி பழனிசாமி ஆட்களுக்கு யா மொய்தீன் கடையில் இருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டதாக மாலை மலர் இணையதளத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டு வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது போலியான நியூஸ் கார்டு ஆகும். இதுபோன்ற வாசகம், மற்றும் புகைப்படத்துடன் மாலை மலர் தரப்பில் எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

    • தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
    • இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம்:

    இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

    ×