search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"

    • முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
    • ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

    நெல்லை:

    ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.

    நெல்லை

    இதனால் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்வார்கள். காசி நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த ஆண்டும் ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.

    தர்ப்பணம்

    அவர்கள் படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

    இதற்காக குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். ஏற்கனவே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் அங்கும் பஸ் போக்குவரத்து இருந்ததால் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அதனை அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர். இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    போலீஸ் பாதுகாப்பு

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    இதனால் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் படித்துறை பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் முன்எச்சரிக்கையாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே அருவிக்கரைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் மிகவும் குறைந்த அளவே பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுந்தது. ஆனாலும் குற்றாலம் அருவி கரையை சுற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


    வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

    வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.


     


    • கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்தது.
    • திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிடகூடாது என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி இந்த கோவிலை தழுவி செல்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    சிறப்பு அதிகாரி நியமனம்

    இந்த விழாவுக்காக நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கண க்கானோர் ஒரு வாரத்துக்கு முன்பே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்குவார்கள். ஆடி அமாவாசை தினத்தன்று அவர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அங்கு வந்து தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்து வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த ஆண்டு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறப்பு அதிகாரியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியை நியமித்தார். மேலும் கோவில் திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிட கூடாது என்றும் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    திருவிழா கோலாகலம்

    இந்நிலையில் இன்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதற்காக அம்பை அகஸ்தியர் பட்டி யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் ஏறி பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலுக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் முன்பு உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே நெல்லையில் இருந்து பேட்டை, கல்லூர், முக்கூடல் வழியாக பாபநாசம் செல்லும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். ஆடி அமாவாசை யான இன்று ஏராளமான பக்தர்கள் பாபநாசம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

    இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆடி திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய இயக்குனர் மாரிமுத்து, சிறப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையம், பாபநாசம் சோதனை சாவடி, சொரிமுத்தையனார் கோவில் ஆகிய இடங்களில் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    • தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது.
    • மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

    இக்கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    மேலும் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி, காலையில் அருவியில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்திமலையில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இன்று காலை பக்தர்கள் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்தனர்.

    • புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம்.
    • அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புனித தீர்த்தங்களான காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடு துறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக் கட்டம், பவானி முக்கூடல், பாப நாசம், சொரி முத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.

    நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ் கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.

    பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள்.

    ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகே தான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    வகுச குளத்தில் நீராடுங்கள்

    கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்து வந்த போது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார்.

    அவரின் திருவருளால் லவகுசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம். ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும், மன சஞ்சலம் நீங்கும், பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும்.

    ஆடி அமாவாசை நாளில், குசலவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    21 பிண்டங்கள்

    பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக செய்யப்படும் வழிபாட்டை சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    • பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாவிடில் அது பலனை தராது.
    • மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் முறைப்படி செய்ய வேண்டும்.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

    எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்த பண்டங்களாகும்.

    • தாய், தந்தை இல்லாத ஆண்கள் அமாவாசை விரதம் இருக்க வேண்டும்.
    • உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.

    அமாவாசை நாளில் எல்லோரும் விரதம் இருக்க தேவையில்லை. தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதம் இருக்கலாம். திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது.

    காரணம் அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது. ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.

    பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின் அவர்கள் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். சகோதரர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு அன்னதானம் தரலாமே தவிர அமாவாசை விரதத்தை கணவர் இருக்கும் பெண்கள் கடைபிடிக்கக் கூடாது. அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

    • பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.
    • எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

    குடும்பத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ நம் முன்னோர்கள் ஆசி தேவை. பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.

    தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள்.

    இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

    எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம்' என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ' என்று பொருள். விஷ்ணுவில் இருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாக கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாட்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும்.

    அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையில் இருந்து விடுபட்டு வளர்பிறைக்கு செல்லும் நாள். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் சந்திரன் தந்தை சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

    சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடியாக வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம்.

    சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

    நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாக செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு.

    தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாரும் இல்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

    • பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
    • பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள்.

    சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

    பித்ரு தோஷம்

    ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.

    பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.

    லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

    அமாவாசை தர்ப்பணம்

    வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

    அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

    மூன்று தலைமுறை தர்ப்பணம்

    அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

    அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

    அகத்திக்கீரை

    முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.

    கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஆடி அமாவாசை அன்று மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    அதன்படி, ஆடி அமாவாசையன்று நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, ஆடி அமாவாசையையொட்டி இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர். இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

    இதேபோல், கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் ஆடி அமாவாசையை யொட்டி சூரிய உதயத்தின்போது கடலில் நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, கடலில் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலும்பிச்சை பழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனிதநீராடி சூரியபகவானை வழிபட்டனர். பின், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி அமாவாசையை யொட்டி இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • காகம் வடிவில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.
    • அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் நம் வீட்டிற்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம்.

    ஆடி அமாவாசையில் காகத்திற்கு சாதம் கொடுக்க மறக்காதீர்கள். காகம் வடிவில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

    அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

    சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

    தோஷங்கள் நீங்கும்

    முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

    காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள், குடும்ப பிரச்சினைகள்தீரும். குழந்தைபாக்கியம், கல்யாண யோகம் கிட்டும்.

    காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை தரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.

    அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானை திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

    முன்னோர்கள் மகிழ்ச்சி

    சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    • தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    • ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரை மற்றும் ஆறங்கரைகளில் பக்தர்கள் புனித நீராடினார்கள். தாமிரபரணி ஆற்று படித்துறை, காவேரி படித்துறை, ராமேஸ்வரம், பவானி கூடுதுறை மற்றும் குளித்துறை, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர்.

    முன்னோர்களின் ஆசி

    ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. த்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம்.
    • முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஆடி அமாவாசை சிறந்த நாள்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்று ஏராளமானோர் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம். எனவே நீர்நிலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக பித்ருக்களை சென்றடையும்.

    இதன்படி நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் கடற்கரை ஒரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு அமாவாசை சிறந்த நாள் அதிலும் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆடி அமாவாசை தினத்தில் பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    ஒருவரது குடும்பத்தில் தீராத நோய்கள் இருக்கும், பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும், எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போகும், கடன் பிரச்சினை அதிகமாகும். கணவன்- மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவு என தினம் தினம் குருச்ஷேத்திர போர்க்களமாக வீடு இருக்கும். இதற்கு காரணம் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.

    ×