search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி உத்தரவு"

    வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது‌.

    கடலூர்:

    இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • விசாரணை அறிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

     திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. போனஸ் வாங்கியதும் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் புறப்படுகிறார்கள்.

    கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி நடக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் நேற்று காலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரோந்துப்பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.
    • தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், கட்டண கழிப்பிடம், நகராட்சி கட்டிடங்கள் குத்தகை உள்ளிட்டவற்றுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம்.

    இதில் குத்தகை இனத்தொகை குறைவாக பதிவு செய்தும், உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இது தொடர்பாக நகராட்சி இளநிலை உதவியாளர் சரஸ்வதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்கம் வசூல், புதிய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய கட்டணக் கழிப்பிடம், புதிய பஸ் நிலைய தட்டுமுறுக்கு கிழங்கு மற்றும் பூவிற்கும் உரிமம் உள்ளிட்டதற்கான டெண்டர்கள் விடப்பட்டதில் குத்தகை இனம் தொகை மிகவும் குறைவான அளவில் கோரப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதில் உரிமை தொகையும் செலுத்தப்படவில்லை. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த முறைகேடுகள் இருப்பது தெரிந்தது. மேலும் டெண்டரில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் தற்போது டெண்டர் விடப்பட்டதில் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்திய நகராட்சி பொறியாளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஞானசேகரன், உதவியாளர் புஷ்பராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    அதே போல இதற்கு முன்பு விடப்பட்டதிலும் முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அப்போதைய நகராட்சி பொறியாளராகவும், தற்போதைய ஜோலார்பேட்டை நகராட்சி பொறியாளர் கோபு என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவுபடி, தற்போது ஏலம் விடப்பட்ட தினசரி மார்க்கெட் புதிய, பழைய, பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், புதிய பஸ் ஸ்டாண்ட் தட்டு முறுக்கு, கிழங்கு, உரிம தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும், வசூல் தொகையை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் . மறு ஏலம் விடப்படும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. 

    • மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
    • பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் செயல்படும் மத்திய அரசு மானியம் பெறும் ரியல் முதியோர் இல்லம் மற்றும் கட்டணமில்லாமல் செயல்படும் ஸ்ரீசாய் முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில், தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லம் தனியார் முலம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 320 நபர்கள் தங்கி பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தாராபுரம் வட்டத்தில் செயல்படும் மத்திய அரசு மானியம் பெறும் ரியல் முதியோர் இல்லம் மற்றும் கட்டணமில்லாமல் செயல்படும் ஸ்ரீசாய் முதியோர் இல்லமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது அனைத்து முதியோர் இல்லங்களும் விரைவில் உரிமம் பெற்று செயல்படவும் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவிக்காக இணைஇயக்குநர், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் அவர்களுக்கு கடிதம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

    ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
    • அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும்.

    திருப்பூர்:

    கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் கட்டாயம் இருக்க வேண்டுமென வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வி.ஏ.ஓ.,க்கள், நில வருவாய் ஆய்வாளர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் பணி நாட்களில், மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை தகவல் பலகையில் எழுதி வைத்து செல்ல வேண்டும்.கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    ×