search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெண்டர் விடுவதில் குளறுபடி:சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அதிரடி உத்தரவு
    X

    டெண்டர் விடுவதில் குளறுபடி:சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அதிரடி உத்தரவு

    • உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.
    • தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், கட்டண கழிப்பிடம், நகராட்சி கட்டிடங்கள் குத்தகை உள்ளிட்டவற்றுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம்.

    இதில் குத்தகை இனத்தொகை குறைவாக பதிவு செய்தும், உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இது தொடர்பாக நகராட்சி இளநிலை உதவியாளர் சரஸ்வதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்கம் வசூல், புதிய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய கட்டணக் கழிப்பிடம், புதிய பஸ் நிலைய தட்டுமுறுக்கு கிழங்கு மற்றும் பூவிற்கும் உரிமம் உள்ளிட்டதற்கான டெண்டர்கள் விடப்பட்டதில் குத்தகை இனம் தொகை மிகவும் குறைவான அளவில் கோரப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதில் உரிமை தொகையும் செலுத்தப்படவில்லை. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த முறைகேடுகள் இருப்பது தெரிந்தது. மேலும் டெண்டரில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் தற்போது டெண்டர் விடப்பட்டதில் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்திய நகராட்சி பொறியாளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஞானசேகரன், உதவியாளர் புஷ்பராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    அதே போல இதற்கு முன்பு விடப்பட்டதிலும் முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அப்போதைய நகராட்சி பொறியாளராகவும், தற்போதைய ஜோலார்பேட்டை நகராட்சி பொறியாளர் கோபு என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவுபடி, தற்போது ஏலம் விடப்பட்ட தினசரி மார்க்கெட் புதிய, பழைய, பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், புதிய பஸ் ஸ்டாண்ட் தட்டு முறுக்கு, கிழங்கு, உரிம தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும், வசூல் தொகையை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் . மறு ஏலம் விடப்படும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×