search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காளி"

    • ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும்.
    • ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    ஆண்டு தோறும் ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விடும். உடனடியாக அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிறகு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். அந்த அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது கண்கொள்ளா காட்சி யாக இருக்கும்.

    முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் நடை அடைக்கப்பட்டு விடுவது உண்டு. ஆனால் ஆடி மாதம் பக்தர்கள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக மேல்மலையனூர் மேல்தலத்தில் பகலில் நடைசாத்தப்படுவது இல்லை.

    எனவே பக்தர்கள் நாள் முழுக்க அங்காளம்மனை தரிசனம் செய்ய முடிகிறது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு இது வசதியாக உள்ளது. இரவு 9 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.

    அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும். ஊஞ்சலில் உற்சவரை காணும் மக்களில் பலர் கருவறை அம்மனையும் வழிபட்டு செல்கிறார்கள்.

    அங்காளம்மனை அமைதிப்படுத்தும் நிகழ்வு ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டுவதை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்யும் நடைமுறை வழக்கம் சுமார் 28 ஆண்டுக்கு முன்புதான் தோன்றியது. மிக குறுகிய காலத்துக்குள் இது பக்தர்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளது.

    அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும் போது சில பக்தர்கள் ஆர்வ மிகுதியால் தேங்காய், எலுமிச்சை, பழத்தில் சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று கோவில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் இத்தகைய வழிபாட்டை, பக்தர்கள் தவிர்ப்பது நல்லது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.

    கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.

    சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

    அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத் தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.

    மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.

    ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.

    ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.

    எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.

    மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை களை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.

    இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    • ஆன்மாக்களுக்கு அதிதேவதை அங்காளி ஆகும்.
    • அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே அவள் வந்து துன்பத்தை தீர்த்து வைப்பாள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஓரையில், 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடி விடும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

    இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

    தோஷம் போக்கும் அங்கபிரதட்சணம்

    குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் மேல்மலையனூர் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பாள். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

    அங்கப்பிரதட்சணம் செய்வது அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும். இந்த உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது.

    ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோவிலில் அம்மனுடைய சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

    மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடும். இந்த பாவச்சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அங்க பிரதட்சணமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவ செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடும். மேலும் கோவிலை சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாக கருதப்படுகிறது.

    அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகியவை அங்க அவயங்களாகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.

    பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கி குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முன்பாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் கோவில் உள்ளே சென்று அம்மன் புற்றை வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    அங்க பிரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது.

    அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவை தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. அங்காள பரமேசுவரி மீது பாரத்தை போட்டு விட்டு பிரதட்சணம் செய்ய வேண்டும். அங்க பிரதட்சணத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் மேல்மலையனூர் தலத்தில் அதை செய்ய தவறுவதில்லை.

    • கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள்.
    • அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.

    மேல்மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். ஆங்காரமாகவும அகோரமாகவும் இருந்த அன்னை திருவண்ணாமலை சென்று புனித நீராடி தன் சுயஉருவம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து அமர்ந்தாள் என்பது புராண வரலாறாகும்.

    அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி சற்று வித்தியாசமாக காணப்படுகிறாள். அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக பார்த்தால் அவள் ஆவேசத்துடன் இருப்பது போல தோன்றும்.

    பொதுவாக வடக்கு திசை நோக்கி இருக்கும் கடவுள்கள் ஆவேசத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அங்காள பரமேசுவரி தோற்றம் அமைந்துள்ளது.

    நாம் மகிழ்ச்சியுடன் பார்த்தால் அவளும் நம்மை மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல இருக்கும் என்றார். அது உண்மை தான் என்பதை கருவறை அருகில் சென்று வரும் ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக உள்ளது.

    கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள். பொதுவாக சிவசக்தி ஒருங்கே காணப்படும் போது அம்பாள் அருகில் ஈசனை லிங்க வடிவில் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் அம்பிகை அருகில் ஈசன் மானிட உருவில் இருக்கிறார்.

    இத்தகைய சிவசக்தி அமைப்பு தமிழ்நாட்டில் மேல்மலையனூரில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் சிறப்புகளில் இந்த கருவறை அம்சம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் சற்று பின்னோக்கி மல்லாந்த நிலையிலும் ஈசன் ரிஷப வாகனத்திலும் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ளனர். அங்காள பரமேசுவரி இந்த அமைப்பில் மல்லார்ந்த பார்வையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி தன் இடது காலை மடித்து வலது காலை பிரம்மன் தலை மீது வைத்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் காலடியில் மேலும் 4 தலைகள் உள்ளது. அரக்கர்களை அங்காளம்மன் தன் காலில் மிதித்து வைத்திருப்பதாக இது உணர்த்துகிறது.

    அங்காள பரமேஸ்வரிக்கு முழுமையான மலர் மாலை அலங்காரம் செய்து விடுவதால் பக்தர்களுக்கு இந்த வடிவ அமைப்பு தெரிய வாய்ப்பில்லை.

    அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. அவளது 4 கரங்களில் முன் கரங்களில் கத்தி, கபாலம் வைத்துள்ளாள். பின் கரங்களில் உடுக்கையும் சூலமும் தரித்துள்ளாள். தலையில் நாக மகுடம் சூடி இருக்கிறாள். இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் உருக வழிபட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் லேசாகி விடும்.

    திருமணம் கைக்கூடும்

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல வேண்டும். அது முடிந்ததும் அங்காள பரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

    • கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
    • பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.

    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றாலும் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவதையே சிறப்பாகவும் புண்ணியம் தருவதாகவும் கருகிறார்கள்.

    குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.

    ஆலய வளாகத்துக்குள் நுழைவு வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள்.

    பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.

    மங்கலம் தரும் குங்குமம்

    அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.

    ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.

    பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

    மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

    அங்காளம்மன் காயத்ரி

    ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

    • அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி நல்லுறவு ஏற்படும்.
    • பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள்.

    சில கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்தி கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும்.

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே "அங்காளி" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி "அங்காள பரமேஸ்வரி" என்றானது.

    அங்காளம்மன் யாக குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன் அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு வாங்கி செல்வதை காணலாம்.

    மக்கள் கூட்டம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும் மாதம் தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது.

    சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள்.

    ×