search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvanaikaval"

    • தைத்தெப்பம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இந்த கோவிலில் தை தெப்பத்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோவிலை அடைந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி வெள்ளிமஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில், 26-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்தில், 27-ந்தேதி இரவு சுவாமி கைலாசபர்வதம் வாகனத்தில், அம்மன் அன்னபட்சி வாகனத்தில், 28-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், 29-ந் தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில், அம்மன் பல்லக்கில், 30-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்தில், 31-ந் தேதி இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் பல்லக்கில் 4ம் பிராகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.

    தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 3- ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல் மாலை 6.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். 5-ந்தேதி காலை கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு, மாலை ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    • 150 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    • அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இதேபோல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப் பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இந்த வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

    இதையடுத்து இன்று (16-ந்தேதி) மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

    திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெற்றது.

    முதல் நாள் பூஜையின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

    • திருவானைக்காவல் கோவிலில் குபேர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    திருச்சி

    பஞ்சப்பூத திருத்தலங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் நீர்தலமாகும். இங்கு ஓவ்வொரு ஐப்பசி பவுர்ணமி அன்றும் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அன்னாபிஷேகத்தின் போது லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது என்றும் இதனை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 40 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேர லிங்கத்திற்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பஞ்ச பிரகாரத்தை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    பின்னர் குபேர லிங்கத்தின் அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சுவாமி மேல் அலங்கரிக்கப்பட்ட அன்னத்தை தனியாக வைத்து விட்டு மீதமுள்ள அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. குபேர லிங்கத்தின் மீது அலங்கரிக்கப்பட்ட அன்னம் காவிரி ஆற்றில் விடப்பட்டது.

    இதேபோல் திருவானைக்காவல் வடக்குதெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தெப்பகுளம் அருகில் உள்ள கரியமாலிஷ்வரர், அம்மாமண்டபம் காசிவிஸ்வநாதர் கோவிலில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    • தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
    • இந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள சூரியதீர்த்த தெப்பகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

    பின்னர் அவர்கள் 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.
    • இக்கோயிலில் நாவல் மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

    தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள். பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அதுவே முக்கியம். அந்த ஞானத்தை அள்ளி வழங்குபவள் அகிலாண்டேஸ்வரி.

    ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி, அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த, ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வருகிறாள்.

    நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?'' என்று கேட்கிறாள். அவள் குரலில் ஏளனம். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். "தேவி! ஆம்... நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக இருக்கிறான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அங்கு நாம் குரு சிஷ்யை என்ற முறையில் திகழ்வோம்'' என்கிறார்.

    அவரின் உத்தரவை ஏற்று அன்னை பூமிக்கு வருகிறார். திருவானைக்காவில் காவிரி நதியில் நீர் எடுத்து லிங்கம் அமைத்து ஈசனை வழிபடுகிறார். புராண காலத்தில் இத்தலம் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அதில் ஒரு மரத்தடியில் ஜம்பு என்னும் முனிவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார்.

    இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார். இறைவன் அளித்தது என்று முனிவர் விதையையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

    விதை வயிற்றுக்குள் வளர்ந்து கிளைகள் தலைக்கு மேல் பரவ, சிரசு வெடித்து முனிவர் முக்தி அடைந்தார். எனவே இறைவன் "ஜம்புகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    அகிலத்தைக் காக்க அம்பிகை தவம் இருந்ததால் "அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள். இங்கு அன்னை ஈசனிடம் குரு - சிஷ்யையாக இருந்து ஞான உபதேசம் பெற்றதால், இக்கோவிலில் இறைவன், இறைவிக்கு திருக்கல்யாணம் கிடையாது.

    எல்லையில்லாத கல்வியை முழுவதும் கற்று முடிக்காத நிலையில், அன்னை இன்னும் ஒரு மாணவியாகவே காட்சி அளிக்கிறாள். அனைவரும் சிவஞானம் பெற்று, பாவங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்' என்று அன்னை நீர் லிங்கம் பிடித்து வழிபட்டதால் இது தனிச் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. அந்த வழிபாடு இன்றும் தொடருகிறது.

    உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் அகிலாண்டேஸ்வரி சந்நிதியிலிருந்து பெண் உருவம் ஏற்று, தன்னை அம்பிகையாக நினைத்து சிவவழிபாடு நடத்துகிறார்.

    ஆரம்பத்தில் அன்னை உக்கிர சொரூபமாக இருந்தாள். பக்தர்கள் அன்னையை வெளியில் நின்றே தரிசித்தார்கள். ஸ்ரீஆதிசங்கரர் இரண்டு ஸ்ரீசக்ரங்கள் செய்து அதில் அன்னையின் சக்தியை ஆவாகனம் செய்தார். அவை அழகான தாடகங்களாக அன்னையின் காதில் ஒளி வீசின. அன்று முதல் அம்பிகை சாந்த சொரூபமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். அவளின் அழகு மதிஒளி போல் பிரகாசிக்கிறது.

    லலிதா சகஸ்ரநாமம் அவளை "தாடங்க யுகலீ பூத தபனோடுப மண்டலா' என்கிறது. "நன்கு மலர்ந்த செண்பகப்பூ போல் வாசம் வீசுபவள். அவளின் மாணிக்கம், வைர மூக்குத்தி ஒளியில் இந்த உலகமே ஒளி பொருந்தி இருக்கிறது' என்கிறது சகஸ்ரநாமம். "முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள்' என்கிறார் ஆதிசங்கரர் தன் செஜந்தர்ய லஹரியில்.

    இங்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் அம்பிகை தவம் இருந்ததால் இங்கு நடக்கும் ஆடிவெள்ளி திருவிழா மிகச் சிறப்பானதாகும். அம்பிகை காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி அளிக்கிறாள்.

    ஒருமுறை வேதியர் ஒருவர் "கவி இயற்றுவதில் வல்லமை தர வேண்டும்" என்று அம்பிகையை வேண்டினார். அவளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்து தியானம் இருந்தார்.

    அவருக்கு அருள் செய்ய விரும்பிய அம்பிகை வெற்றிலை போட்ட வாயுடன் கோயிலுக்குள் சென்றாள். தாம்பூலம் தரித்து, சர்வ அலங்காரத்துடன் அழகிய ரூபமான அன்னை, வேதியர் அருகில் வந்து "வெற்றிலைச் சாற்றை உன் வாயில் உமிழட்டுமா?'' என்று கேட்கிறாள். வேதியரோ அவளைத் தரக்குறைவாகப் பேசி விரட்டி விடுகிறார்.

    அன்று கோயில் மடப்பள்ளியில் வேலை அதிகமாக இருக்கவே, வரதன் என்ற பணியாள் அசதியின் காரணமாக ஓரமாகப் படுத்துறங்குகிறான். அவனைக் கவனியாமல் கோவிலைப் பூட்டி விட்டுச் சென்று விடுகிறார்கள் அர்ச்சகர்கள்.

    கோபத்துடன் வந்த அம்பிகை தன் வாயிலிருந்த தாம்பூலத் சாற்றை உமிழ, அது வாய் திறந்து படுத்திருந்த வரதனின் வாயில் விழுகிறது. அந்த நிமிடத்தில் இருந்து வரதன் கவிபுனையும் ஆற்றல் பெற்றான். அவரே "காளமேகப் புலவர்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். சிலேடை நயம் மிகுந்த அவரது பாடல்கள் இன்றும் தமிழ் இலக்கியத்தில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.

    தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

    துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி

    தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

    தெத்தாதோ தித்தித்த தாது? என்ற தகர வரிசையில் அமைந்த பாடல் அவரின் புலமைக்கு ஒரு சான்று. (பொருள்: தத்தித் தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை உண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினைத் தேடிச் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் தித்தித்தது?)

    கல்வி அறிவு இல்லாத ஒரு மடப்பள்ளி வேலையாளுக்கு கவி புனையும் ஆற்றல் கொடுத்தது அவளின் கருணையே. இத்தலம் சோலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. முற்காலச் சோழர்களில் ஒருவரான கோட்செங்கட்சோழன் என்பவரால் கட்டப்பட்டது இக்கோயில். சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

    மொத்தம் ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில், நான்காவது திருச்சுற்றில் உற்சவமும், தேரோட்டமும் நடைபெறும். இக்கோயிலில் நாவல் மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

    இந்தக் கோவிலில் சக்தியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பிகை சிவனைப் போலவும், சிவன் அம்பிகையைப் போலவும் வேடமிட்டு வந்து பிரம்மனின் சாபம் தீர்த்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவ மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

    அங்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜோடஉபச்சார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு உற்சவ மண்டபத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தனர். வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாடேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை நேற்று ஏற்றப்பட்டது.
    ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று கார்த்திகை தீப சொக்கப்பனை ஏற்றப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு நேற்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக சுவாமி சன்னதியில் தீப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பின் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தனர். சுவாமி, அம்பாளுக்கும் முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். அங்கு கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதனை கண்டருளினர்.

    அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஏற்றப்பட்ட சொக்கப்பனையை கண்டருளினர். தொடர்ந்து தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.
    அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.
    பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 50-வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    விழாவை திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, சொற்பொழிவரங்கம், மாகேஸ்வர பூஜை, திருமுறை பண்ணிசை, அறுபத்துமூவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று காலை அறுபத்து மூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர்.

    பின்னர் திருமுறைகள் பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
    திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி எதிரே பல ஆண்டுகளாக தாமிர தகடுடன் கூடிய கொடிமரம் இருந்தது. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொடிமரத்தில் முலாம் பூசப்பட்ட தங்க தகட்டை பதிக்கும் பணி நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில், கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மேற்பார்வையில் நடை பெற்றது.

    26 அடி உயரமுள்ள இந்த கொடிமரத்தில் 140 கிலோ செம்புத்தகடு, 100 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது. கொடிமரத்தின் கிழக்கில் அகிலாண்டேஸ்வரி உருவமும், மேற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை, தெற்கில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது.

    கொடிமரத்தின் பிரம்மபாதம் 5 அடியும், விஷ்ணு பாதம் 3 அடியும் அழகிய வேலைப்பாடுகளுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் நடுவே வரகுதானியம் நிரப்பப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.



    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்து தேர் காலை 8.15 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் காலை 10.10 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

    மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் காலை 10.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி கோஷத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 31-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந்தேதி நண்பகலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 21-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும்.
    தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும். வைணவம், சைவத்தின் அடையாளங்களாக கருதப்படும் இந்த இரு ஆலயங்களும் மிகவும் தொன்மை வாய்ந்தவையாகும். இவற்றின் வரலாறானது இதிகாச காலத்தில் இருந்தே தொடங்குகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மூலவர் விமானம் ராமபிரானின் முன்னோர்களான இசுவாகு மன்னனால் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவன் வழிபட்டு வந்ததாகும். ராமபிரான் தனது பட்டாபிஷேகத்தில் பங்கேற்ற ராவணனின் உடன் பிறந்த சகோதரர் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் வழிபடுவதற்கான அன்பு பரிசாக இந்த விமானத்தை வழங்கினார். இந்த விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் தரையில் வைத்து விட்டு கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீராடி மகிழ்ந்து சந்தியாவதனம் செய்த போது பெருமாள் அந்த இடத்திலேயே நிலை கொண்டு விட்டார் என ஸ்ரீரங்கம் கோவில் தல வரலாறு கூறுகிறது.

    இதே போன்ற ராமாயண இதிகாச தொடர்பு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் உள்ளது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான். ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.

    இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது. பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமன் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவவழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.

    உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றான். இதுவே ராமபிரான் வழிபட்ட இத்திருத்தலத்தின் வரலாறாகும்.

    ×