search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம்

    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.



    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்து தேர் காலை 8.15 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் காலை 10.10 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

    மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் காலை 10.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி கோஷத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×